500 நோட்டு செல்லாது விவகாரம்.. பாஜகவை கண்டித்து மமதா ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி.. 13 கட்சி ஆதரவு
டெல்லியில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து மமதா பானர்ஜி ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்றார்.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றார். அவருடன் சிவசேனா கட்சி உள்பட 13 கட்சிகள் ஆதரவளித்து உடன் சென்றன.
500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. இதனால், இந்தியா முழுவதும், மக்கள் கடும் பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர். வங்கி வாசல்களின் பணத்தை மாற்றுவதற்காகவும், ஏடிஎம் மையங்களின் முன்பு பணத்தை எடுப்பதற்காகவும் மக்கள் கால் கடுக்க நிற்க வேண்டியிருக்கிறது. இன்னமும் அதற்கான தீர்வு மக்களுக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மமதா பானர்ஜி கடுமையாக மோடியின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், மோடியின் இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தினார். திரும்பப் பெறாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில், மக்களுக்கு எதிரான 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும், அதனை எதிர்த்து தான் நடத்தப் போகும் பேரணிக்கு பிற கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இந்தப் பேரணிக்கு ஆதரவு தர மறுத்துவிட்டது. ஆனால் பாஜகவின் கூட்டணிக் கட்சியினா சிவசேனா மமதாவின் கோரிக்கையை ஏற்று பேரணியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டது.
இதனையடுத்து, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நாளான இன்று மமதா பானர்ஜி நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்தார். அவருடன் ஆதரவு தெரிவித்த 13 கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளும் வந்தனர். பின்னர், அங்கிருந்து மமதா பானர்ஜியின் தலைமையில் பேரணியாக ஜனாதிபதி மாளிகை நோக்கி அனைவரும் சென்றனர்.