25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்.! "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்கவே முடியாது.." மம்தா பானர்ஜி அதிருப்தி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனங்களை ரத்து செய்யும் கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த தீர்ப்பை ஏற்கவே முடியாது எனத் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் மேற்கு வங்க அரசு உடன் நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. தேர்வுகளில் பதில் எழுதாத வெற்று ஓஎம்ஆர் தாள்களைச் சமர்ப்பித்தவர்கள் பலருக்கும் போலியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டனர் என்பதே புகாராகும். மேலும், 24,640 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், 25,753 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டதும் சர்ச்சையானது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், 25,000 ஆசிரியர்கள் பணிநியமனத்தை ரத்து செய்து கடந்தாண்டு உத்தரவிட்டது. கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், புதிய தேர்வு முறையை 3 மாதங்களில் நடத்தி முடிக்க உத்தரவிட்டது. புதிய தேர்வு முறையில் தேர்ச்சி பெறாதவர்கள் இத்தனை காலம் வாங்கிய சம்பளத்தைத் திரும்பத் தரவும் உத்தரவிட்டுள்ளது.
மம்தா பானர்ஜி அதிருப்தி
இதற்கிடையே 25,000 ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்ததை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, "எனக்கு நீதித்துறையின் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால், இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது..
இந்த விவகாரத்தில் மேற்கு வங்கத்தின் முன்னாள் கல்வி அமைச்சர் சிறையில் இருக்கிறார். ஆனால், வியாபம் வழக்கில் என்ன நடந்தது. வியாபம் வழக்கில் எத்தனை பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்?. மேற்கு வங்கத்தின் கல்வி முறையை மொத்தமாகச் சீர்குலைக்கவே பாஜக இதைச் செய்கிறார்கள். வேலை இழந்தவர்களைச் சந்திப்பேன். அவர்கள் யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டாம். அரசு உங்களுடன் நிற்கும்
சிறைக்குப் போனாலும் பரவாயில்லை
எங்கள் வழக்கறிஞர்கள் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்வார்கள். வேட்பாளர்கள் விரக்தியில் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் அவர்களைச் சந்திப்பேன். மனிதாபிமான அடிப்படையில் நான் அவர்களுடன் நிற்பேன். இந்த நடவடிக்கைக்காக, பாஜக என்னைச் சிறைக்கு அனுப்ப விரும்பினாலும் பரவாயில்லை.. நீங்கள் அதற்குத் தயாராக இருந்தால் என்னைக் கைது செய்யலாம்.
பாதிக்கப்பட்டோர் உடன் துணை நிற்போம்
பாஜகவும் மத்திய அரசும் மேற்கு வங்கத்தை அரசியல் ரீதியாகக் குறிவைக்கவே இதுபோல செய்கிறது. எஸ்எஸ்சி (ஆசிரியர் தேர்வை நடத்தும் அமைப்பு) ஒரு தன்னாட்சி அமைப்பு. நாங்கள் (மேற்கு வங்க அரசு) அவர்களின் வேலையில் தலையிட மாட்டோம். நீதிமன்றம் மூன்று மாதங்கள் புதிய தேர்வு செயல்முறையை முடிக்க அறிவுறுத்தியுள்ளது. நாங்கள் பாதிக்கப்படுபவர்களுடன் உடன் நிற்கிறோம்.
பாஜக இப்போது வக்பு வாரிய சட்டத்தை வேறு கொண்டு வந்துள்ளது. மத்தியில் சீக்கிரமே புதிய அரசு அமையும். பாஜக தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டு புதிய அரசு அமைந்தால், வக்பு மசோதா ரத்து செய்யப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications