கோவாவில் ஆட்சியை பிடிக்க மீனை வைத்து "தூண்டில் போடும்" மம்தா பானர்ஜி! பாஜக, காங்கிரசுக்கு ஸ்கெட்ச்
பானாஜி: மேற்குவங்க மாநிலத்தில் பாஜக எழுச்சியைத் தடுத்து திரிணாமுல் காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றி மமதா பானர்ஜிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அந்த உத்வேகத்தோடு கோவா மாநிலத்தில் கால்பதிக்க வியூகம் அமைத்து உள்ளார் மம்தா பானர்ஜி.
கோவா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு அந்த கட்சி தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
கோவாவில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. உள்ளூர் கட்சிகள் சில தொகுதிகளில் வெற்றி பெற்றனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜகவுக்கு ஆட்சியளிக்க வாய்ப்பு வழங்க மக்கள் விரும்பவில்லை என்பதுதான் தேர்தல் முடிவு சொன்ன பாடம். இருப்பினும் பிற கட்சிகள் தயவோடு கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜக.
திடீரென டிஜிபியை சந்தித்த திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதி.. என்ன காரணம்.. அவதூறு பரப்புபவர் யார்?
வெற்றிடம்
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விட்டது பாஜக. கடந்த தேர்தலிலேயே அந்த அதிருப்தி எதிரொலித்தது. எனவே இந்த தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு காத்திருக்கும் என்று மம்தா பானர்ஜி நினைக்கிறார். காங்கிரசும் எழுச்சி பெற்றதாக தெரியவில்லை. எனவே இருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது.
ஒரே மாதிரி கலாச்சாரங்கள்
மேற்கு வங்க மாநிலம் மற்றும் கோவா மாநிலம் ஆகியவற்றுக்கு இடையே ஒரேமாதிரியான கலாச்சார ஒற்றுமைகள் நிறைய காணப்படுகின்றன. அதில் முக்கியமானது இரு மாநிலங்களிலும் கால்பந்தாட்டம் ரொம்பவே புகழ்பெற்றது. அதேபோன்றுதான் மீன் உணவுகள் இரு மாநில மக்களாலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. (இந்த ஒற்றுமைகள் கொண்ட மற்றொரு மாநிலம் கேரளா ) கலாச்சார ஒற்றுமை காரணமாக கோவா மாநில மக்களோடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இரண்டறக் கலந்து விட வாய்ப்பு இருப்பதாக மமதா பானர்ஜி நினைக்கிறார்.
சுற்றுப் பயணம் ஆரம்பம்
இந்த நிலையில்தான் கட்சியின் ராஜ்யசபா எம்பி டெரிக் ஓ பிரைன் மற்றும் பிரபல கால்பந்தாட்ட வீரர் பிரசுன் பானர்ஜி ஆகியோர் நேற்று முதல் ஒரு வார காலம் கோவாவில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் மனநிலையை கேட்டு அறிந்து வருகிறார்கள். 'Khela Hobe' என்று இந்த அரசியல் ஆபரேஷனுக்கு கோட்வேர்ட் சூட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூடாரம் காலியாகிறதா
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கோவாவில் வளர்க்க மம்தா தயாராகி வருவதை அறிந்த அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முயற்சி செய்து வருவதாகவும், இதற்காக, மம்தா பானர்ஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூண்டில் போடும் மம்தா
இருப்பினும் இந்த விஷயத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வாய் திறக்கவில்லை. மீன் கலாச்சாரத்தை வைத்து வாக்காளர்களுக்கு மட்டுமில்லாது காங்கிரசுக்கும் தூண்டில் போட்டு வருகிறது மமதா பானர்ஜி கட்சி. ஒரே நேரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் காலி செய்துவிட்டு கோவாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீவிர திட்டத்துடன் காய் நகர்த்தி வருகிறது மமதா கட்சி. இந்த நிகழ்வுகளை பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமைகளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன.