தொடர்ந்து 3ஆவது முறை... நாளை மறுநாள் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் வென்றுள்ள நிலையில், வரும் 5ஆம் தேதி மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் நேற்று சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், மொத்தமுள்ள 292 தொகுதிகளில் திரிணாமுல் கட்சி 214 இடங்களைக் கைப்பற்றியது, பாஜக 76 இடங்களில் மட்டுமே வென்றது.
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ரிசல்ட் 2021: ஏழைப்பெண் சந்தனா பவுரி இனி எம்எல்ஏ..குவியும் பாராட்டு
நாளை மறுநாள் பதவியேற்கிறார்
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வென்றுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் மம்தா ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், மம்தா பானர்ஜி நாளை மறுநாள் (மே 5) முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
எளிய முறையில் பதவியேற்பு விழா
திரிணாமுல் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றபோதும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவர் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். எம்எல்ஏ-ஆக இல்லாத போதும் அவரால் முதல்வராகப் பொறுப்பேற்க முடியும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும். கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா பேச்சு
திரிணாமுல் வெற்றியை தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், சில இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவரும் அமைதி காக்க வேண்டும். எந்தவொரு வன்முறையிலும் ஈடுபட வேண்டாம். பாஜகவும் மத்திய அரசும் நமக்கு நிறைய சித்திரவதைகளைச் செய்துள்ளன. ஆனாலும், இப்போது நாம் அமைதி காக்க வேண்டும்
முடிவுகளை மாற்றினர்
நாட்டில் இப்போது கொரோனா நிலை மோசமாக உள்ளது. நாம் கொரோனா உடன் போராட வேண்டும். நந்திகிராம் தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரி மறு வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனக் கடிதம் எழுதியுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. எப்படிச் செய்ய அனுமதித்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம். நந்திகாரம் தொகுதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் முடிவுகளை மாற்றியுள்ளனர். இது குறித்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன் என்று அவர் கூறினார்.