அதிர்ச்சி.. இளைஞரை லாரியின் முன்பு கட்டிவைத்து 3 கிமீ ஓட்டி சென்ற டிரைவர்... பதறவைக்கும் வீடியோ
புவனேஸ்வர்: ஒடிசாவில் வேலை கேட்டு சென்ற இளைஞரை செல்போன் திருடியதாக கூறி லாரியின் முன்புறம் கட்டி வைத்து 3 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஒடிசா மாநிலம் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரா ஸ்வைன் (வயது 28). டிரைவர். இவர் பகுதி நேரமாக லாரி ஓட்டிய அனுபவம் கொண்டவர்.
தற்போது இவருக்கு பணி இல்லை. இதனால் வருமானம் இன்றி அவர் தவித்தார். கடந்த 22ம் தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார்.

செல்போன் திருடியதாக...
பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதையடுத்து டிரைவர்களிடம் வேலை கேட்க சென்றார். அப்போது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை காணவில்லை எனக்கூறினார். மேலும் கஜேந்திரா ஸ்வைன் தான் திருடி இருக்கலாம் என அவரும், பிற டிரைவர்களும் சந்தேகம் அடைந்தனர். இதனால் செல்போன் எங்கே? எனக்கேட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.

லாரியில் கட்டிவைத்து...
மேலும் அவருக்கு செருப்புமாலை அணிவித்து ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் கட்டினர். லாரியின் முன்புறம் கஜேந்திரா ஸ்வைன் கட்டப்பட்ட நிலையில் லாரியை 3 கிலோமீட்டர் தூரம் ஓட்டி சென்றனர். இந்த வேளையில் கஜேந்திரா ஸ்வைன் கதறி அழுதார். மேலும் லாரியில் இருந்து தன்னை இறக்கிவிட வேண்டும் என அவர் கெஞ்சினார். இருப்பினும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. அதன்பிறகு அவரை இறக்கிவிட்டு சென்றனர்.

வெளியான வீடியோ
இதற்கிடையே இந்த சம்பவத்தை ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பு மக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மனித உரிமைகள் ஆணையம்
இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும் மாநில மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிந்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications