நடத்தையில் சந்தேகம்.. மனைவியுடன், மாமியாரையும் சேர்த்து கொன்ற ஹோட்டல் அதிபர்
பெங்களூர்: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன், மனைவியையும், மாமியாரையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. இதனால் தம்பதியின் இரு குழந்தைகளும் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பெங்களூர், விஜயநகரை சேர்ந்தவர் குமார் (40). இவரது மனைவி வசந்தா 34. இத்தம்பதிக்கு இன்சாரா என்ற பத்து வயது மகளும், தேஜாஸ் கவுடா என்ற 5 வயது மகனும் உள்ளனர். குமார், அந்த ஏரியாவில் அசைவ ஹோட்டல் மற்றும் கேட்டரிங் தொழில் நடத்தி வருகிறார்.
நன்றாக போய்க் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், சமீபகாலமாக புயல் வீச தொடங்கியுள்ளது. வசந்தாவுக்கு சொந்தமாக ஒரு நில சைட், பெங்களூரில் இருந்துள்ளது. அதை விற்று பணமாக தருமாறு, குமார் கேட்க தொடங்கியுள்ளார். இதை வசந்தாவும், அவரது தாய் லீலாம்மாவும் (61) ஏற்க மறுத்துள்ளனர்.
இதனால், கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை வசந்தா தட்டி கேட்டபோது சண்டை உச்சத்திற்கு சென்றுள்ளது. மேலும், வசந்தாவின் நடத்தை மீது குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அதற்காகவும் சண்டை போட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று, வசந்தா தனது இரு குழந்தைகளுடன், பக்கத்து ஏரியாவான ஆர்பிசி லேஅவுட்டிலுள்ள தனது தாய் வீட்டுக்கு போய்விட்டார். குமார், நேரில் சென்று கூப்பிட்டும் வீடு திரும்ப மறுத்துவிட்டாராம். அப்போது, கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவிக்கதான், இங்கு வந்து தங்கியுள்ளாயா என்று குமார் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த லீலாம்மா மருமகனை கண்டித்துள்ளார்.
ஏற்கனவே, மகளுக்காக லீலாம்மா ஆதரவு அளித்துவருவதால் ஆத்திரத்தில் இருந்த குமார், சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, மனைவியையும், மாமியாரையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே அவ்விருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து வீட்டுக்கு வெளியே வந்த குமார், "நான் கொன்னுட்டேன்.. நான் கொன்னுட்டேன்" என்று கன்னடத்தில் சொல்லி கத்தியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓடி சென்று, பார்த்தபோது, தாயும், மகளும் ரத்த வெள்ளத்தில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் விஜயநகர் போலீசார் சம்பவ இடத்தில் பரிசீலனை நடத்தினர். குமாரை கைது செய்தனர்.