வித் அவுட் டிராவலுக்கு ஒரு அளவில்லையாடா? - ரயிலின் அடியில் படுத்து பயணம் செய்த வாலிபர்
திருவனந்தபுரம்: ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்கள் டிக்கெட் பரிசோதகர்களின் கண்ணில் படாமல் இருப்பதற்காக பல்வேறு உத்திகளை கையாள்வது உண்டு.
டிக்கெட் பரிசோதகர்கள் வருவது தெரிந்தால் கழிப்பறைக்குள் சென்று ஒளிந்து கொள்வது, நைசாக அடுத்த பெட்டிக்கு செல்வது என இவர்கள் ஏமாற்றுவது வழக்கம்.
ஆனால், கேரளாவில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி இதுவரை எங்குமே கேள்விப்படாத வகையில் ரயிலுக்கு அடியில் மிகவும் சாகசமான வகையில் உயிரை பணயம் வைத்து 225 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார்.
சாகச செயல்!:
அசாம் மாநிலம் சலபாரி மாவட்டத்தைச் சேர்ந்த டியோல் பசமட்டாரி என்ற வாலிபர் தான் இந்த சாகச செயலில் ஈடுபட்டார். கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 1 வருடமாக எர்ணாகுளத்தில் பணிபுரிந்து வந்தார்.
வேலை தேடும் படலம்:
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கும், அவரது நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து டியோல் வேலை தேடி திருவனந்தபுரத்திற்கு செல்ல தீர்மானித்தார்.
வித் அவுட் பயணம்:
இதையடுத்து, அவர் நேற்று காலை எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வஞ்சிநாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். வழக்கமாக டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் வழக்கமுடையை இவர் நேற்றும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ய தீர்மானித்தார்.
விபரீத யோசனை:
ரயிலில் ஏற முயன்றபோது டிக்கெட் பரிசோதகர்களை பார்த்து பயந்த டியோல் அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக என்ன செய்யலாம் என யோசித்தார். அப்போது தான் அவருக்கு ஒரு விபரீதமான யோசனை வந்தது.
ரயிலடி பயணம்:
ரயிலுக்கு அடியில் அமர்ந்து பயணம் செய்தால் யாருக்கும் பயப்பட வேண்டாம் என கருதினார். இதன்படி ரயிலின் அடியில் சக்கரங்களுக்கு மேல் உள்ள சிறிய ஒரு இடைவெளியில் படுத்துக் கொண்டார்.
படுத்துக் கொண்டு பயணம்:
திருவனந்தபுரம் வரை சுமார் 225 கி.மீ. தூரம் இவர் ரயிலின் அடியில் படுத்துக் கொண்டு பயணம் செய்தார். காலை 10 மணியளவில் அந்த ரயில் திருவனந்தபுரத்தை அடைந்தது. ஆனால், டியோலால் உடனடியாக ரயிலிலிருந்து இறங்க முடியவில்லை.
ஹைய்யோ ஒரு கால்!:
சிறிது நேரத்தில் ரயில் பராமரிப்பு பணிகளுக்காக யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. யார்டில் சென்ற பின்னர் ஊழியர்கள் ரயிலை முழுவதும் பரிசோதிப்பது வழக்கம்.ஒரு ஊழியர் ரயிலின் அடியில் பார்த்தபோது ஒரு கால் மட்டும் தென்பட்டது.
ஊழியர் அதிர்ச்சி:
சில சமயங்களில் ரயில் முன் யாராவது பாய்ந்தால் அவர்களது உடல் உறுப்புகள் சக்கரங்களுக்கு இடையே சிக்குவது உண்டு. அது போல தான் கால் சிக்கியிருக்கக் கூடும் என நினைத்து பார்த்தபோது சக்கரங்களுக்கு மேல் உள்ள சிறிய இடைவெளியில் ஒரு வாலிபர் படுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்த ரயில்வே ஊழியர் அதிர்ச்சியடைந்தார்.
எச்சரிக்கை மட்டுமே:
உடனடியாக டியோலை ரயில்வே ஊழியர் வெளியே கொண்டு வந்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்தது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.