மணிப்பூர் தேர்தலில் அசத்தும் "விஐபி.." எந்த சொத்தும் இல்லாமல் போட்டியிடும் இளைஞர்!
இம்பால்: எந்த சொத்தும் இல்லாத பட்டதாரி இளைஞர் ஒருவர் தேர்தலில் மணிப்பூர் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
நிங்தெளஜம் என்ற இளைஞர் மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் இளைய வேட்பாளர். இவருக்கு வயது 26. தன்னிடம் எந்த சொத்தும் இல்லை என்று வேட்புமனுவில் தெரிவித்துள்ளார் சிங்.
மணிப்பூரில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதி செம்க்மாய், இங்கு தான் நிங்தௌஜம் போபிலால் சிங் போட்டியிடுகிறார். இவருக்கு அப்பகுதி மக்கள் பிரசாரத்துக்கு பண உதவி செய்து உதவி வருகின்றனர்.
மணிப்பூர்: பிரதமர் மோடி வருகைக்கு இடதுபோராளி குழுக்கள் மீண்டும் எதிர்ப்பு- முழு அடைப்புக்கு அழைப்பு!
நிங்தெளஜம்
நிங்தெளஜம் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். செம்க்மாய் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பளிக்காததால், அவர் மணிப்பூர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது செம்க்மாய் தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து நிங்தெளஜம் சிங் தன்னுடைய தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சொத்து இல்லை
மணிப்பூரில் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 173 வேட்பாளர்களில் 91 பேர் கோடீஸ்வரர்கள். மற்றவர்களுக்கு ஓரளவு சொத்து இருக்கிறது. ஆனால் நிங்தெளஜம் சிங்குக்கு எந்த சொத்தும் இல்லை. தான் ஒரு வேலை இல்லா பட்டதாரி இளைஞர் எனவும், தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்து, அந்த வருவாயில் குடும்பம் நடத்திவருவதாக தெரிவித்துள்ளார். மேலும், எனது தொகுதி வாக்காளர்கள் பணத்தின் பின்னால் ஓடுவதில்லை. பணத்தால் அவர்களை வெல்ல முடியாது என்று சிங் தெரிவித்துள்ளார்.
போட்டி
எந்த சொத்தும் இல்லாமல் தேர்தலில் ஒரு கட்சியைப் பிரதிபலித்து போட்டியிடும் ஒரே வேட்பாளர் இவர் தான் என மணிப்பூர் அரசியல் களம் சொல்கிறது. மணிப்பூரில், தேர்தலில் சீட் கிடைக்க அவர் குறைந்தபட்ச பணத்துடன் இருக்க வேண்டும் என்பது சொல்லப்படாத விதி. ஆனால், நிங்தெளஜம் மணிப்பூர் தேர்தலில் விதிவிலக்கு என்கிறார்கள் மணிப்பூர் மக்கள். இந்த தொகுதியில் சிங் மேலும் 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
உதவி
இவருக்கு உள்ளூர் மக்கள் பிரச்சாரத்திற்கு நிதியுதவி செய்துவருகிறார்கள். ''அவர் சமூகத்திற்காக நிறைய விஷயங்களைச் செய்யும் இளைஞர். வருங்கால சந்ததியினருக்கான அவர் உழைத்து வருகிறார். அவரது பிரசாரமும் அப்படித்தான் இருக்கிறது. அவரது பிரசாரம் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது, அதனால்தான் நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்" என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர்
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு வரும் 28-ந் தேதியும் மார்ச் 5-ந் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது மணிப்பூரில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் நேரடி போட்டி நிலவுகிறது.