மணிப்பூர் வன்முறை: தீவிரம் அடைகிறது சிபிஐ விசாரணை.. 53 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமனம்
இம்பால்: மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க 53 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை சிபிஐ நியமனம் செய்துள்ளது. இந்தக் குழுவில் டிஐஜி ரேங்கில் உள்ள இரண்டு பெண் அதிகாரிகள் உள்பட 29 பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார். மலைப்பகுதிகள் நிறைந்த மணிப்பூரில், பெரும்பான்மையாக மெய்தி இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர். இதனால், மணிப்பூரில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி நாட்டையை உலுக்கியது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை மணிப்பூர் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு இதுகுறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அங்கு விரைவில் அமைதி திரும்பும் என்றார்.
இந்த நிலையில், மணிப்பூர் பாலியல் வன்முறை குறித்த வழக்குகளை விசாரிக்க 53 பேர் கொண்ட குழுவை சிபிஐ அமைத்துள்ளது. இந்தக் குழுவில் 29 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் இருவர் டிஐஜி ரேங்கில் உள்ள அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் வன்முறை தொடர்பான 6 வழக்குகளை ஏற்கனவே சிபிஐ விசாரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications