கர்நாடக பந்த்தால் 'ஷட்டவுன்' ஆன பெங்களூர் ஐடி நிறுவனங்கள்.. இழப்பை ஈடுகட்ட இன்று விறு விறு வேலை!
பெங்களூர்: 'கர்நாடக பந்த்' காரணமாக நேற்று விடுமுறை அளித்த ஐ.டி நிறுவனங்கள் பலவும், அதற்கு பதிலாக வழக்கத்திற்கு மாறாக சனிக்கிழமை ஊழியர்களை பணிக்கு அழைத்துள்ளன.
பெங்களூரிலுள்ள ஐடி நிறுவனங்களில் பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றுகிறார்கள். மேலும், எந்த ஒரு போராட்டத்தின்போதும் ஐடி ஊழியர்கள் அதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் கன்னட சங்கத்தினரால் முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில், காவிரி விவகாரம் உணர்வுப்பூர்வமாக இருந்ததால், அசம்பாவிதங்களை தவிர்க்க ஐடி நிறுவனங்கள் நேற்று விடுமு்றை அறிவித்தன. இப்படி அடிக்கடி பந்த் நடத்துவதற்கு, பயோகான் தலைவி கிரன் மஜும்தார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை
இருப்பினும் போராட்டங்கள் வலுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பால், ஐடி நிறுவனங்கள் நேற்று விடுமு்றை அறிவித்திருந்தன. இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்த விடுமுறைக்கு தப்பவில்லை. ஆனால் இதில் சில நிறுவனங்கள் சனிக்கிழமையான இன்று, ஊழியர்களை பணிக்கு அழைத்துள்ளன. சில நிறுவனங்கள் அடுத்த சனிக்கிழமை திறந்திருக்கும் என அறிவித்துள்ளன.
வீட்டிலிருந்து வேலை
பெங்களூரிலுள்ள குய்க்கர் நிறுவனமும் நேற்று விடுமுறை அறிவித்தது. ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்து, வேலை பார்த்தனர். அந்த நிறுவனம், இந்த இழப்பை அடுத்த சனிக்கிழமை பணி நடத்துவதன் மூலம் ஈடுகட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. யூடிசி ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் நிறுவன துணை தலைவர் க்ரிஷ் ராவும் தங்கள் நிறுவனம் வெள்ளிக்கு பதில் சனிக்கிழமை திறந்திருக்கும் என கூறியுள்ளார்.
பாதியில் வெளியேற்றம்
பிலிப்ஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், வெள்ளிக்கிழமை எங்களது ஊழியர்களில் கணிசமானோர் வீட்டில் இருந்து வேலை பார்த்தனர். எனவே சனிக்கிழமை வழக்கம்போல எங்கள் நிறுவனம் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தார். ஹெப்பால் பகுதியிலுள்ள மான்யதா டெக்-பார்க் ஐடி வளாகத்திற்குள் நேற்று காலை வன்முறையாளர்கள் புகுந்து மிரட்டியதால் ஊழியர்கள் பாதியிலேயே வெளியேற வேண்டியதாயிற்று.
டெக்னிக்
சில நிதி நிறுவனங்கள் அலுவலகங்களை மூடுவதுபோல வெளியே காட்டிக்கொண்டு இயங்கியுள்ளன. ஊழியர்களை நிறுவனங்களின் அருகேயுள்ள ஹோட்டல்களில் தங்க வைத்து பணி செய்ய வைத்துள்ளன அந்த நிறுவனங்கள். இதனால் அவற்றின் பணிகள் பாதிக்கப்படவில்லை. அதேநேரம் வீட்டில் இருந்து வேலை பார்த்த ஊழியர்கள் பலரும் நேற்று இணையதள சேவை பிரச்சினையை சந்தித்துள்ளனர். இதனால் பல நிறுவனங்களில் சில மணி நேரம் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
பந்த்தால் பாதிப்பு
பெங்களூரில் மட்டும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் இருக்கும். இவர்கள் பந்த்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உறுதி. ஐடி நிறுவனங்களை இதுபோன்ற பந்த்கள் பாதிப்பது அவற்றின் நிர்வாகங்களை யோசிக்க செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.