பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி... உ.பி. முதல்வர் உத்தரவு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி 14 மற்றும் 15 வயதுடைய உறவுக்கார தலித் சிறுமிகள் இருவர் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். நள்ளிரவில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அவர்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக கூறப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவத்திற்கு ஐநாவும் கண்டனம் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். சரியாக நடவடிக்கை எடுக்காத இரு போலீஸ்காரர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப் பட்டது.
சகோதரிகள் கொலையைத் தொடர்ந்து நாள்தோறும் உத்தரபிரதேசத்தில் நடைபெறும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தான் ஊடகங்களில் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. இதனால் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்களுக்கு உதவி செய்வதற்காக 24 மணி நேரமும் செயல்படும் இலவச ஹெல்ப்லைனை (1090) ஆய்வு செய்த முதல்வர் அகிலேஷ் யாதவ், வரும் கல்வியாண்டு முதல் பள்ளி-கல்லூரிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யும்படி தலைமை செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் தொடர்பான குற்றங்களை முறையாக கண்காணித்து, உடனடியாகவும் முழு உணர்வுடனும் விசாரிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications