ராஜ்யசபா எம்பி பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார் மாயாவதி!
ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி.
டெல்லி: ராஜ்யசபாவில் பேச அனுமதி மறுக்கப்படுவதால் தமது எம்பி பதவியை ராஜினாமா செய்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இரு சபைகளிலும் உறுப்பினர்கள் மற்றும் இயற்கை பேரிடர்களால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன.
இதனையடுத்து இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. ராஜ்யசபாவில் தலித்துகள் மீதான தாக்குதல்களை பட்டியலிட்டு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேச தொடங்கினார்.
ஆனால் சபை தலைவர் ஹமீத் அன்சாரி பின்னர் பேசலாம் என கூறி அனுமதி மறுத்தார். மாயாவதி பேசிக் கொண்டிருக்கும் போது ஹமீத் அன்சாரியின் இருக்கையை முற்றுகையிட்டு அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாயாவதி ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, ராஜ்யசபாவில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து அறிவித்தபடியே எம்பி பதவியை மாயாவதி ராஜினாமா செய்துவிட்டார், மாயாவதியின் இந்த ராஜினாமா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.