ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை! எம்.பி. பதவி இழந்தார்!!
மருத்துவ படிப்பு இடம் ஒதுக்கீடு ஊழல்
வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில் சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்த ரஷத் மசூத் மீது 1990-91 ஆம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு திரிபுரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான இடங்களை வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.
குற்றவாளி என தீர்ப்பு
இந்த வழக்கில் ரஷித் மசூத் குற்றவாளி என கடந்த 19-ந் தேதி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.
இன்று காலை தண்டனை குறித்து இருதரப்பினரும் வாதங்களை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 2.30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஆதாயம் அடைந்த மாணவர்கள் அனைவருக்கும் தலா 1 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கைது
தீர்ப்பு வெளியான உடனே ரஷீத் மசூத் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தகுதியிழப்பு
குற்றவழக்கில் அரசியல்வாதி ஒருவர் தண்டிக்கப்பட்டால் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலேயே எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் பதவியை இழந்துவிடுவார்கள் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ரஷீத் மசூத் தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வருகிறார்.
இன்று ரஷீத் மசூதுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எம்.பி. பதவியை இழந்துள்ள முதல் அரசியல்வாதியானார் ரஷீத் மசூத்.