ஜூலை 25ம் தேதி அகில இந்திய மருத்துவ நுழைவு மறு தேர்வு - சிபிஎஸ்இ
டெல்லி: உச்ச நீதிமன்றத்தால் தள்ளி வைக்கப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வு வருகின்ற 25ம் தேதியன்று நடைபெறும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அகில இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான தேர்வு நடைபெற இருந்த நிலையில் அந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் சில மாநிலங்களில் வெளியானதைத்தொடர்ந்து இந்த தேர்வை தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15 ஆம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது.
மறு தேர்வை நடத்த போதுமான காலஅவகாசம் வேண்டும் என சி.பி.எஸ்.இ தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டு இருந்தது. அதன்படி உச்ச நீதிமன்றம் மறுதேர்வை நடத்த போர்டு கமிட்டிக்கு 4 வாரகால அவகாசமும் அளித்து இருந்தது.
தள்ளிவைக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ மாணவர் தேர்வு 25 ஆம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ தேர்வு போர்டு கமிட்டி நேற்று அறிவித்தது. அன்று காலை 10 மணிமுதல் பகல் 1 மணி வரை நாடு முழுவதும் 1,000 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வு ஏற்கனவே தகுதிபெற்றிருந்தவர்களுக்கு மட்டும் நடைபெறும். இதுபற்றி தேர்வு எழுதுபவர்களுக்கு "ஈ-மெயில்" மற்றும் "எஸ்.எம்.எஸ்" மூலம் முறையாக தகவல் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களை தேர்வு கமிட்டியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தேர்வு கமிட்டி அறிவித்து உள்ளது. இந்த தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.