ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி ஏப்.4-ல் பதவியேற்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி ஏப்.4-ந் தேதி பதவியேற்க உள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி- பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசின் முப்தி முகமது சயீத் முதல்வராக இருந்து வந்தார். அவர் கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி பதவியேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுத படைச் சட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என மெகபூபா வலியுறுத்தி வந்தார்.
இதனால் அம்மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டது.
பின்னர் மக்கள் ஜனநாயகக் கட்சி- பாஜக இடையே தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டெல்லியில் பிரதமர் மோடியையும் மெகபூபா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் வோராவை நேரில் சந்தித்து மெகபூபா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பாஜகவும் மெகபூபா ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளித்தது.
இந்நிலையில் வரும் 4-ந் தேதி ஜம்மு காஷ்மீர் முதல்வராக மெகபூபா பதவியேற்க உள்ளார். அம்மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமைக்குரியவராகிறார் மெகபூபா.