இந்திய கடற்படையின் மிக் 29k பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்தது!
கோவா; இந்திய கடற்படையின் மிக் 29k பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணித்த ஒரு விமானி உயிர் தப்பினார். அவரை பத்திரமாக கடற்படை மீட்டுள்ளது. ஒரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் -29 கே பயிற்சி விமானம் நேற்று மாலை 5 மணி அளவில் அரபிக் கடலின் மேல் சென்று கொண்டிருந்தது. அதில் இரண்டு விமானிகள் பயணித்தனர். எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம் அரபிக்கடலில் விழுந்து மூழ்கியது. இதில் ஒரு விமானி பத்திரமாக உயிர் தப்பினார். அவரை கடற்படை அதிகாரிகள் மீட்டனர். மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்படை வெளியிட்ட அறிவிப்பில். "கடலில் இயங்கும் மிக் -29 கே பயிற்சி விமானம் நேற்று மாலை 5 மணிக்கு விபத்துக்குள்ளானது. ஒரு விமானி மீட்கப்பட்டார். இரண்டாவது விமானியை மூழ்கிய விமானத்தின் பாகங்களை வைத்து தேடி வருகிறோம்.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது , "என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை கோவாவில் 40 மிக் -29 கே போர் விமானங்களைக் கொண்டுள்ளது, இவை ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர் கப்பலிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த கடற்படை விமானங்களில் ஒன்று தான் நேற்று விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
திடீரென சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. என்ன காரணம்!
கடந்த ஒரு வருடத்தில் மிக் -29 கே விமானத்தின் மூன்றாவது விபத்து இதுவாகும். இந்த ஆண்டு பிப்ரவரியில், பறவைகள் தாக்கியதில் மிக் 29 கே விமானம் கோவாவில் விபத்துக்குள்ளானது. விமானிகள் உயிர் தப்பினர்.
கடந்த ஆண்டு நவம்பரில், கோவாவில் மிக் -29 கே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. அதி பயணித்த விமானிகள் இருவரும் அப்போதும் உயிர் தப்பினர்.