பல அமைச்சகங்களை ஒன்றாக இணைத்த மோடி: வளர்ச்சி திட்டங்கள் வேகம் பிடிக்க வாய்ப்பு!
டெல்லி: மோடி தலைமையிலான மத்திய அரசில், ஒன்றுக்கொன்று தொடர்புள்ள துறைகளை ஒரே அமைச்சர்களின் கைகளில் ஒப்படைத்ததன் மூலம் வளர்ச்சி திட்டங்களை துரிதமாக நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி தனது அமைச்சரவையை எதிர்பார்த்ததைபோலவே சிறியதாக அமைத்துள்ளார். அமைச்சர்களுக்கான துறைகளை உன்னிப்பாக பார்த்தால் கடந்த கால ஆட்சிக்கும் இப்போதைய அமைச்சரவைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை தெரிந்துகொள்ள முடியும்.
சுற்றி சுற்றி வந்த பைல்கள்...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றில் ஒரு திட்டத்தை செயல்படுத்த பல அமைச்சகங்களை கோப்புகள் சுற்றிவர வேண்டியிருக்கும். ஒரு அமைச்சகம் ஒப்புக்கொண்ட திட்டம் மற்றொரு அமைச்சகத்தால் நிராகரிக்கப்படும். அதிலும் கூட்டணி கட்சிகளின் அமைச்சர்கள் இரு துறைகளிலும் இருந்தால் போட்டி, பொறாமை காரணமாக திட்டம் அம்பேல் ஆகிய கதைகளும் நடந்தன.
மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை ஒரே அமைச்சருக்கு...
இதை கருத்தில்கொண்டு நரேந்திரமோடி அமைச்சரவையில், ஒன்றுக்கொன்று சம்மந்தப்பட்ட முக்கியமான துறைகள் ஒரே அமைச்சரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை ஒரே அமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அனல் மின் உற்பத்திக்கு தேவை நிலக்கரி. மின்துறை அமைச்சர் கையில் நிலக்கரி துறை இருப்பதால், நிலக்கரி ஒதுக்கீடு வேலை சீக்கிரம் முடிந்துவிடும். இத்துறை அமைச்சராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரும்பு மற்றும் சுரங்கத்துறை ஒரே அமைச்சர் கையில்
இதேபோன்று, இரும்பு மற்றும் சுரங்கத்துறை ஒரே அமைச்சர் கையில் அளிக்கப்படுகிறது. இதனால் இரும்பு ஆலைகளுக்கு தேவைப்படும் இரும்பு தாதுக்கள் கிடைப்பதில் சிக்கல் எழாது.
விமானம்- ரயில் போக்குவரத்தையும் இணைத்திருக்கலாம்...
கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து நிதின் கட்கரிக்கு அளிக்கப்பட்டுள்ளது. மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தை சிறப்பாக நடைமுறைக்கு கொண்டுவந்த சாதனையை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த அமைச்சகம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் விமானம், ரயில் போக்குவரத்தையும் இதனுடன் இணைத்து ஒரே அமைச்சர் கையில் அளித்திருந்தால் இன்னும் சிறப்பாக போக்குவரத்து மேம்படும் என்பது விமர்சகர்கள் பார்வையாக உள்ளது.
புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்...
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு முந்தைய காலகட்டங்களில் நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை ஒரே அமைச்சரின் கையில்தான் இருந்துவந்தது. மீண்டும் அதையே மோடி அரசு பின்பற்றுகிறது. இவ்விரு துறைகளும் அருண்ஜெட்லிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் இந்த புத்திசாலித்தனமான காய்நகர்த்தலால் நாட்டின் உள்கட்டமைப்பு, மின்சாரத்துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாறுதல்களை காண முடியும் என்கிறார்கள்.
விவசாயம், உணவு வழங்கல் ஏன் தனித்தனியே?...
அதே நேரம் விவசாயம், உணவு வழங்கல் மற்றும் உணவுபதப்படுத்துதல் துறைகள் தனித்தனி அமைச்சரின் கையில் அளித்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.