உ.பி. காஸ்கன்ஞ் கலவரம் பின்னணியில் பாக். ஆதரவாளர்கள்.. பாஜக எம்பி சொல்கிறார்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கன்ஞ் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்துத்துவா அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களில் தேசியக்கொடியுடன் அணிவகுத்துச் சென்றனர்.
அப்போது அவர்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் வாழ்க என கோஷம் அப்போது எழுந்ததாக இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். மேலும், இந்த கலவரத்தில் ராகுல் உபாத்யாய் என்ற இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது.
இதையடுத்து முஸ்லிம்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். கலவரம் மற்றும் அதை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். ஆனால், ராகுல் உபாத்யாய் உயிரோடுதான் உள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்து தான் உயிரோடு இருப்பதாகவும், தனது செல்போனுக்கே தன்னை பற்றி வதந்தி தகவல்கள் வந்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ஊர்வலத்தில் தான் பங்கேற்கவில்லை என கூறியுள்ளார்.
இதனிடையே பாஜக எம்.பி. வினய் கட்டியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையின் பின்னணியில் பாகிஸ்தானை ஆதரிக்கும் நபர்கள் உள்ளனர் என்றும், அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் எனவும் கூறியிருந்தார். காஸ்கன்ஞ் சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், முன்பு இந்த மாவட்டத்தில் மத கலவரம் நடந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் அரசு, இந்திய தேசிய கொடி ஊர்வலத்திற்கு இடைஞ்சல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கலவரத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர் உயிரோடு உள்ள நிலையில், அதை முன்வைத்து கலவரம் செய்த இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், வன்முறைக்கு ஆதரவாக கருத்து கூறியவர்களும் மன்னிப்பு கேட்பார்களா, கலவரத்தை தூண்டியவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுமா என்பன போன்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.