பிரதமர் மோடியின் 'மிஷன் 272+ வென்ற கதை"... விவரிக்கும் புத்தகம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 272+ என்ற வியூகம் வகுத்து வென்ற 'வரலாறை' விவரிக்கும் மின்னணு புத்தகம் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் பிரதமர் மோடி. அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது உடனே கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்கான வியூகமாக வகுத்ததுதான் 272+. அதாவது லோக்சபாவில் பெரும்பான்மைக்கு தேவை 272. எம்.பி.க்கள்.
இதனால் 272 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களை வெல்ல வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்டதுதான் "மிஷன் 272+" என்ற வியூகம். இந்த வியூகமும் வெற்றி பெற்று 34 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தது.
இ புத்தகம்
தற்போது மிஷன் 272+ வியூகம் வெற்றி குறித்து ஆராய்ந்து சசி சேகர், லிஸா ஜனி, அங்கிதா சிங் ஆகியோர் ஒரு இ புக்காக கொண்டுவந்துள்ளனர். நரேந்திர மோடியின் 15 மாத கால பிரசாரம் எப்படியெல்லாம் என்பதை பற்றி விரிவாக ஆராய்கிறது இந்த நூல்.
பிரசார உரைகள்
நூலின் முதல் பகுதியில் மோடியின் பிரசார உரைகள் எப்படி இருந்தன என்பது இடம்பெற்றுள்ளது. அதாவது மோடியின் பொருளாதாரப் பார்வை, சுகாதாரத் திட்டங்கள், தொழில்நுட்பம் தொடர்பான பார்வை என பன்முகத் தன்மையை விவரிக்கிறது,
விமர்சனங்கள்
அத்துடன் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்பது தொடங்கி 15 மாத காலமும் நடைபெற்ற விமர்சனங்கள், எதிர்பிரசாரங்கள் ஆகியவற்றை விவரிப்பதுடன் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் மோடி தனது இலக்கை நோக்கி எப்படி பயணித்தார் என்பதும் இடம்பெற்றுள்ளது.
உள்ளூர் தகவல்கள்
இந்தியா முழுவதும் மோடி எப்படி உரையாற்றினார், ஒவ்வொரு மாநிலத்திலும் பேசும் போது உள்ளூர் தலைவர்கள், அதன் சிறப்புகள், பழம் பெருமைகள் என தனக்கே உரித்தான பேசியதையும் இந்த நூல் விளக்குகிறது. மோடியின் பிரசாரத்தில் கேரளாவின் நாராயண் குரு, சிவகிரி மடம், அசாமியின் கோபிநாத் பொர்தோலி என பலவற்றையும் சுட்டிக்காட்டியதால் இந்த அடையாள பிம்பங்கள் நாடு முழுவதும் அனைவரிடத்திலும் சென்றடைந்தன.
பாரத் விஜய் பேரணிகள்
2014 மார்ச் 25-ந் தேதி முதல் மே 10-ந் தேதி வரை மொத்தம் மோடி பங்கேற்ற 196 பாரத் விஜய் பேரணியை விவரிக்கும் அத்தியாயமும் இதில் இருக்கிறது. அரசியல் கட்சிகள் குறித்த 'பஞ்ச்'விமர்சனங்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை "ரீ கவுண்டிங்" அமைச்சர் என பேசியவை குறித்தும் இந்த அத்தியாயம் பேசுகிறது.
நேர்காணல்கள்
தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி தொலைக்காட்சிகளுக்கு மோடி அளித்த நேர்காணல்கள் பற்றிய விவரங்களையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. தமிழில் தந்தி தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, புதிய மாலை முரசு ஆகியவற்றுக்கு மோடி நேர்காணல் அளித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
டீ கடை பிரசாரங்கள்
அதேபோல் டீ கடை பிரசாரங்கள், 3டி பிரசாரங்கள் ஆகியவற்றை பற்றியும் விரிவாக பதிவு செய்துள்ளது இந்த நூல். அதாவது தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் லோக்சபா தேர்தலில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்பதை அழகாக பதிவு செய்துள்ளது இந்த நூல்.