ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி.. கான்பூரில் இஸ்லாமியரை தாக்கியவர்களுக்கு.. 24 மணி நேரத்திற்குள் பெயில்!
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி தாக்கியதாக கைது செய்யப்பட்ட 3 பேரும் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட 24 மணி நேரத்திற்கு உள்ளாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கான்பூரில் அப்சார் அஹமது என்ற இஸ்லாமியரை 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று மோசமாக தாக்கி, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட சொல்லி வற்புறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. முன் பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.
அப்சார் அஹமதுவை 10 அடங்கிய கும்பல் ஒன்று அவரை சுற்றி நின்றி கன்னத்தில் அறைந்து ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல சொல்லியுள்ளனர். அதோடு அவரை தடிமனான குச்சிகள் மூலம் தாக்கி கொடுமை படுத்தி உள்ளனர். இந்த குழு வன்முறையில் ஈடுபட்ட 10 பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எல்லோரின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

உலுக்கியது
தன்னுடைய பிஞ்சு மகளுக்கு முன்பாக அப்சார் அஹமது இப்படி கொடுமையாக தாக்கப்பட்டது இணையம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸ் இந்த வழக்கில் தொடர்புடைய அஜய், ராகுல் குமார், அமர் குப்தா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அதோடு அஜய், அவரின் மகன் டான், கேஸு நீட்டா, ரமேஷ், ராணி உள்ளிட்ட 10 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்தனர்.

போராட்டம்
இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் உடனடியாக பஜ்ரங் தல் அமைப்பினர் கான் பூரில் போராட்டத்தில் குதித்தனர். அந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட போலீசார், இந்த வழக்கை நேர்மையாக விசாரிப்போம். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்போம்.

பரிசீலனை
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்து பரிசீலிப்போம் என்று பஜ்ரங் தல் அமைப்பினரிடம் போலீசார் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்தே அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்ட பஜ்ரங் தல் அமைப்பினர் போராட்டத்தை நிறைவு செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 3 பேருமே வெறும் 24 மணி நேரத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை
கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் கான்பூர் கீழமை நீதிமன்றம் பெயில் வழங்கிய நிலையில், இவர்கள் காவல்நிலையத்தில் இருந்து பெயிலில் விடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இப்படி உடனடியாக பெயிலில் வந்தது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கான்பூர் போலீஸ் கமிஷனர் அசிம் அருண், நாங்கள் சட்டப்படியே செயல்பட்டு வருகிறோம்.

பெயில்
சட்டத்திற்கு உட்பட்டே இவர்கள் பெயிலில் விடுக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நாங்கள் துரிதமாக செயல்பட்டுள்ளோம். இதில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருகிறோம். அவர்களையும் விரைவில் கைது செய்வோம். சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு கருதி கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன, என்று கான்பூர் போலீஸ் கமிஷனர் அசிம் அருண் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications