ஒரே ராக்கெட்டுல 20 சேட்டிலைட்ஸ்... இஸ்ரோ, சென்னை மாணவர்களின் சாதனைக்கு மோடி பாராட்டு
டெல்லி: ஒரே ராக்கெட்டின் மூலம் இன்று 20 செயற்கைக் கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் வரலாற்று சாதனைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 20 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டு, உரிய இலக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.
காரணம் இன்று விண்ணில் ஏவப்பட்ட 20 செயற்கைக்கோள்களில் 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் ஆகும். மேலும், அதில் ஒன்று இஸ்ரோவுடையது, மற்ற இரண்டு முறையே சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புனே மாணவர்கள் தயாரித்த மாணவ செயற்கைக்கோள்கள் ஆகும்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
As a common citizen, was totally immersed in happiness to see our youngsters excelling & taking so much interest in science.
— Narendra Modi (@narendramodi) June 22, 2016
இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் மூலம் மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றத்தை உருவாக்க முடியும்? என்பதை நமது விண்வெளி ஆராய்ச்சிகள் இதற்கும் முன்னரும் தற்போதும் நிரூபித்துள்ளன.
பல ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சிகளின் பலனாகவும், நமது விஞ்ஞானிகளின் திறமையாலும் பிறநாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் உதவிடும் வகையில் நாம் இந்த துறையில் மேம்பாடு அடைந்துள்ளோம். ஒரேநேரத்தில் 20 செயற்கைக் கோள்களை ஏவி இன்று இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனைக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
Saw with immense joy that students from institutions in Pune & Chennai played a role in the making of satellites. This touched me.
— Narendra Modi (@narendramodi) June 22, 2016
இன்று ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சென்னை மற்றும் புனே மாணவர்கள் தயாரித்த செயற்கைக் கோள்களும் இடம்பெற்றிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டின் சராசரி குடிமகன் என்ற வகையில், நமது இளைஞர்கள் அறிவியல் துறையில் செலுத்திவரும் ஆர்வத்தையும், அடைந்துவரும் முன்னேற்றத்தையும் அறிந்து மகிழ்ச்சி கடலில் திளைத்துள்ளேன்' என குறிப்பிட்டுள்ளார்.
Our space programme has time and again shown the transformative potential of science & technology in people's lives.
— Narendra Modi (@narendramodi) June 22, 2016
இதேபோல், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டியுள்ளார்.
20 satellites in a go! @isro continues to break new barriers. Hearty congratulations to our scientists on the monumental accomplishment.
— Narendra Modi (@narendramodi) June 22, 2016