டெல்லியில் மோடி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்!!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதலாவது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். இன்று காலை பிரதமர் அலுவலகத்துக்கு சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் டெல்லியில் முகாமிட்டிருந்த அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டுக்கு சென்று அவருடன் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து தற்போது டெல்லி சவுத் பிளாக்கில் மோடி தலைமையிலான அமைச்சரவையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டுவது, இக்கூட்டத்தில் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.