வாஜ்பாய் அறிஞர்- மோடி ஒரு "ஆக்ஷன் கிங்".. மாஜி சிங்கப்பூர் பிரதமர்
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அளவுக்கு அறிஞராக இல்லாவிட்டாலும் கூட சிறந்த செயல் வீரராக இருக்கிறார் நரேந்திர மோடி என்று முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் கோ சோக் டாங் கூறியுள்ளார்.
1990ம் ஆண்டு சிங்கப்பூரின் பிதாமகர் லீ குவான் யூவிடமிருந்து பிரதமர் பொறுப்பை ஏற்று 14 வருடம் பிரதமராக இருந்தவர் டாங் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிங்கப்பூர் அமைச்சரவையில் முதுநிலை அமைச்சராக இருக்கிறார் டாங். இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
மோடியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் டாங். அப்போது அவர் கூறியதாவது:
அறிஞர் வாஜ்பாய்
வாஜ்பாய் சிறந்த அறிஞராக, அரசியலில் அனைத்து நுனுக்கங்களையும் தெரிந்தவராக, சுறுசுறுப்பானவராக திகழ்ந்தார்.
மோடி அப்படி இல்லை
ஆனால் மோடி அப்படி இல்லை. அவர் வாஜ்பாய் அளவுக்கு அறிஞராக இல்லாவிட்டாலும் கூட தீவிர செயல் வீரராக இருக்கிறார். இந்தியா குறித்த அவரது கனவுகள் சிறப்பாக உள்ளன.
வேலை தெரிகிறது
அவருக்கு தான் என்ன செய்கிறோம் என்பது நன்கு தெரிந்துள்ளது. தனது வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார். சிறந்த செயல் வீரராக இருக்கிறார்.
சக்தி வாய்ந்த தலைவர்
முழுமையான சக்தி வாய்ந்த தலைவராக அவர் திகழ்கிறார். தனது எண்ணங்களை செயல்வடிவத்தில் கொண்டு வருகிறார். நோக்கம் நல்லதாக இருக்கிறது.
எதிர்பார்ப்புகள் அதிகம்
அவர் மீது இந்திய மக்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன். ஆனால் அதைச் செய்து முடிக்கும் வரை மக்கள் அமைதி காக்க வேண்டும் என்பதுதான் எனது கவலை.
இந்தியா - சீனா
ஆசிய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தக் கூடிய வலிமை படைத்தவை இந்தியாவும், சீனாவும். இந்த இரு நாடுகளும் ஆசிய பொருளாதாரம் என்ற பறவையின் இரு இறக்கைகள் போல.
ஸ்மாட்ர் சிட்டி திட்டம் அபாரம்
இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் மோடி அரசின் திட்டம் அபாரமானது. வரவற்புக்குரியது. இந்தத் திட்டத்திற்கு சிங்கப்பூர் அரசு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் அளிக்கும்.
3 முக்கியம்
ஒரு நகரம் நிம்மதியான, சுகாதாரமாக, அமைதியாக வாழக் கூடியதாக திகழ, நல்ல போக்குவரத்து வசதிகள், மத நல்லிணக்கம், மின்சாரம் ஆகியவை முக்கியம். இது எங்களது சொந்த அனுபவத்தில் தெரிந்து கொண்டது என்றார் டாங்.
அமைச்சர் ஈஸ்வரன்
டாங்குடன் பிரதமர் அலுவலக அமைச்சர் ஈஸ்வரன், தேசிய வளர்ச்சிக்கான இணை அமைச்சர் டெஸ்மான் லீ ஆகியோரும் வந்திருந்தனர்.