பீகார் தேர்தலை முன்வைத்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கும் இங்கிலாந்து ஊடகங்கள்
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வது சரியான தருணம் அல்ல என்கின்றன அந்நாட்டு ஊடகங்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 3 நாட்கள் இங்கிலாந்தில் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் குறித்து இங்கிலாந்தின் தி இண்டிபென்டென்ட் பத்திரிகை, "இங்கிலாந்துக்கு வருகை தரும் நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும் பின்னடைவு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில், சகிப்பின்மை குற்றச்சாட்டுக்கு மோடியின் அரசாங்கம் உள்ளாகி இருக்கிறது; பீகார் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது ஆளும் பா.ஜ.க.; இந்த நிலையில் பிரதமர் மோடி இங்கிலாந்து வருகிறார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தி கார்டியனோ, இந்தியாவின் ஆளும் கட்சி ஒரு மாநிலத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது; பிரதமர் மோடியின் தேர்தல் வியூகத்துக்கு ஒரு சோதனை களமாக பீகார் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமோ, இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்குமான பொருளாதார ரீதியான உறவுகள் சீராக இல்லாத நிலைமை நீடிக்கிறது. லண்டனைச் சேர்ந்த வோடபோன், கெய்ரான் நிறுவனங்கள் இந்தியாவில் வரி ஏய்ப்பு விவகாரத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. பிரிட்டனின் டாடா ஸ்டீல் நிறுவனம் 1,200 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
இதுபோன்ற விவகாரங்களில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமான உறவு சீராக இல்லை... இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் படுதோல்வியை பிரதமர் மோடியின் பாரதிய ஜனதா கட்சி சந்தித்துள்ளது. இதன் மூலம் வரி மற்றும் நிலம் தொடர்பான சீர்திருத்தங்களை இந்திய அரசு நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் இந்திய பங்குச் சந்தை 4% சரிவை சந்தித்துள்ளது இந்திய அரசு மீதான நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்துகிறது. ஆகையால் பிரதமர் மோடி இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்வதற்கு இது சரியான தருணம் அல்ல என்று எழுதியுள்ளது.
அதேபோல் பீகார் தேர்தலில் முன்வைக்கப்பட்ட மாட்டிறைச்சி அரசியல், மதவாத சர்ச்சை பேச்சுகளையும் மறக்காமல் இங்கிலாந்து ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. மேலும் சகிப்பின்மை விவகாரத்தில் பா.ஜ.க. அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் பீகார் தேர்தல் தோல்வி மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவை பதிவு செய்துள்ளன.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மத வன்முறைகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை இங்கிலாந்து 10 ஆண்டுகாலம் புறக்கணித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.