மோடி முதலில் இந்தியாவில் இருக்கும் மசூதிக்கு தான் சென்றிருக்க வேண்டும்: முஸ்லிம் சட்ட வாரியம்
போபால்: வெளிநாட்டு மசூதிக்கு செல்லும் முன்பு பிரதமர் மோடி நம் நாட்டில் உள்ள மசூதிக்கு முதலில் சென்றிருக்க வேண்டும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா முகமது வாலி ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்தி மோடி அபுதாபியில் உள்ள உலக புகழ் பெற்ற ஷேக் ஜயீத் மசூதிக்கு சென்றார். மசூதியை சுற்றிப் பார்த்த அவர் அமீரக அதிகாரிகளுடன் செல்ஃபி எடுத்தார்.
இந்நிலையில் இது குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா முகமது வாலி ரஹ்மானி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
வெளிநாட்டில் உள்ள மசூதிக்கு செல்லும் முன்பு மோடி இந்தியாவில் இருக்கும் மசூதிக்கு சென்றிருக்க வேண்டும். அவர் பிரதமர் ஆன பிறகு மதச்சார்பின்மை உள்ளிட்ட அரசியல் சாசனத்தின் அம்சங்கள் சமரசம் செய்யப்படுகிறது. நம் நாட்டை ஒரு குறிப்பிட்ட மதத்தின் நாடாக ஆக்க முயற்சி நடந்து வருகிறது என்றார்.