'மோடிஜி, நான் ஒன்றும் சோனியா, ராகுல் கிடையாது, அச்சுறுத்திப் பார்க்க!' - கெஜ்ரிவால்
டெல்லி: நான் ஒன்றும் சோனியாவோ ராகுல் காந்தியோ அல்ல, மோடி அரசு என்னை அச்சுறுத்திப் பார்க்க என்று கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஷீலா தீட்சித் முதலமைச்சராக இருந்த போது குடிநீர் விநியோகிப்பதற்காக 385 லாரிகள் வாங்கப்பட்டதில், ரூ.400 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வந்த ஆம்ஆத்மி அரசு, உண்மை கண்டறியும் குழு அமைத்து விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கை பிரதமருக்கும், அம்மாநில ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது.
ஆனால் அறிக்கை மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளதால் ஊழல் ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநர் நஜீப் ஜங் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைதொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்கள் இருவரிடமும் எந்த நேரத்திலும் விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது.
இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியைத் தாக்கிப் பேசினார்.
அவர் கூறுகையில், "மோடிஜி, என்னை அச்சுறுத்த நான் ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி அல்ல. என்னுடன் ரகசிய ஒப்பந்தம் வைத்துக்கொள்ள நான் ஒன்றும் ராபர்ட் வதோரா அல்ல. ராகுல் காந்தி அல்லது சோனியா காந்தி, ராபர்ட் வதோராவுக்கு எதிராக மோடி அரசு, வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் என்னைக் குறிவைத்து சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
சோதனைகள், பொய்யான வழக்குகள் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்றவற்றின் மூலம் என்னையும் மக்களையும் அச்சுறுத்த மோடி நினைக்கிறார். ஆனால், நான் வலுவான பாறை போல நிற்கிறேன். நான் வளைந்து கொடுக்கப் போவதோ, பின்வாங்கப் போவதோ இல்லை. பிரதமர் மோடி தனக்கு நேரடி போட்டியாக என்னை கருதுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.