சட்டவிரோத மாட்டு இறைச்சி வர்த்தகத்தில் கிடைக்கும் பணம் தீவிரவாதத்துக்கு போகிறது -மேனகா காந்தி
ஜெய்ப்பூர்: சட்ட விரோதமாக நடைபெறும் மாட்டு இறைச்சி வர்த்தகத்தின் மூலமாக வரும் வருமானம் தீவிரவாதத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த 'விலங்குகளுக்காக இந்தியா' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு மேனகா காந்தி பேசியதாவது:
மாட்டிறைச்சியை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலுள்ளது. மேலும் தோல் பொருட்களுக்காகவும் மாடுகள் கொல்லப்படுகின்றன. சீனாவின் மக்கள் தொகையைவிட நாம் குறைந்த மக்கள் தொகை கொண்டவர்கள் என்றபோதிலும் நாம்தான் அவர்களை விட அதிக அளவில் மாடுகளை கொல்கிறோம்..
உத்தர பிரதேச காவல்துறை நான்காண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு அறிக்கையின்படி பார்த்தால், சட்ட விரோதமாக மாடுகளை சட்டவிரோதமாக கொல்லும் நபர்களிடமிருந்து தீவிரவாதத்துக்கு பணம் சப்ளை ஆகிறது.
பசு மாட்டை கொன்றதன் மூலம் கிடைக்கும் பணம்தான் வெடிகுண்டு தயாரிக்கவும், ஆளை கொள்ளும் தீவிரவாதத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. நாம் ஏன் இதை அனுமதிக்க வேண்டும். நான் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறித்து கூறவில்லை. இந்திய சட்ட விரோத மாட்டு வர்த்தகத்தை பற்றி மட்டுமே பேசுகிறேன்.
ஒரு மதத்தினர் மாடுகளை அடிமாடுகளாக விற்பனை செய்கின்றனர், இன்னொரு சமூகத்தினர் அதை வெட்டி கொல்கின்றனர். எனவே எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துடனும் இந்த விவகாரத்தை தொடர்புபடுத்த நான் விரும்பவில்லை.
வங்கதேசம் 160000 டன் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்வதாக கூறுகிறது. ஆனால் வங்கதேசத்தில் ஒரு பசுமாடு கூட கிடையாது என்பதுதான் உண்மை. அந்த மாட்டிறைச்சி அனைத்தும் இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக வங்கதேசம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுபவைதான் என்பது கண்கூடு.
சமூக அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் இணைந்து இந்த சட்ட விரோத தொழிலை நிறுத்த உதவி செய்ய வேண்டும்". இவ்வாறு மேனகா காந்தி பேசினார். மேனகா காந்தி விலங்குகள் உரிமை ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மேனகா காந்தி பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.