வானிலை அப்டேட்: கடலோர கர்நாடகா, கொங்கன் கோவா, மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு
Recommended Video
பெங்களூரு: கடலோர கர்நாடகா மற்றும் கொங்கன் கோவா பகுதிகளில் இன்று முதல் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 9-ந் தேதியன்று மும்பையில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு கருத்து தெரிவித்த இந்திய வானிலை மைய அதிகாரிகள், புனே மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் கடலோர கர்நாடகா, கொங்கன் கோவா மற்று மும்பையில் மழையால் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளனர்.
இந்திய வானிலை மைய அறிக்கையின்படி, கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், ராயலசீமா, தென் கடலோர ஆந்திரா, மேற்கு மத்திய வங்காள விரிகுடா, கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, வடமேற்கு மத்திய வங்காள விரிகுடாவின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரபிக் கடல், தெற்கு கொங்கன் மற்றும் கோவாவின் சில பகுதிகள், கர்நாடகா, ராயலசீமாவின் எஞ்சிய பகுதிகள், தெலுங்கானாவின் சில பகுதிகள், கடலோர ஆந்திராவின் சில பகுதிகள், மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஜூன் 6-ந் தேதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தெலுங்கானா, கடலோர ஆந்திராவின் சில பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்துக்கு தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவிக்கிறது.
வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி கொங்கன் பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் அவசர நிலைமைகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மாநில பேரிடர் மீட்பு குழு எச்சரிக்கை விடுத்தும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்த்ராலாயா பகுதி கட்டுப்பாட்டு அறைகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சிகள் மற்றும் தாசில்தார் அலுவலகங்கள் 24 மணிநேரம் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பைவாசிகள் அவசர உதவிகளுக்கு 1916 எண்ணிலும் மும்பை புறநகர்வாசிகள் 1077 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். மத்திய இந்தியாவில் வழக்கமான மழைப் பொழிவு இருக்கும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை.
ஆனால் தென் தீபகற்பத்தில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் வழக்கத்துக்கும் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வடகிழக்கு இந்தியாவில் வழக்கத்துக்கும் குறைவான மழைப்பொழிவு இருக்குமாம்.
நாடு முழுவதும் இந்த மாதத்தின் மழைப்பொழிவு அளவு 101% இருக்கக் கூடும். ஆகஸ்ட் மாதத்தில் இது 94% ஆக இருக்கும். மழைப்பொழிவு 90-96% இருப்பின் அது வழக்கத்துக்கும் குறைவானது. 96% முதல் 104% வரை இருந்தால் அது வழக்கமான மழைப்பொழிவு. 104% முதல் 110% வரை மழைப்பொழிவு இருந்தால் அது வழக்கத்துக்கும் அதிகமான மழை என கருதப்படும். 110%க்கும் அதிகமான மழைப்பொழிவு எனில் வழக்கத்தை விட மிக அதிகமான மழைப்பொழிவு.