மோர்பி பாலம் விழுந்தது கடவுளின் விருப்பம்.. நீதிமன்றத்தில் கூறிய நிறுவன மேனேஜர்.. என்ன ஒரு ஆணவம்
அலகாபாத்: "மோர்பி பாலம் இடிந்து விழுந்தது கடவுளின் விருப்பம்" என அந்தப் பாலத்தை புதுப்பித்துக் கொடுத்த ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் நீதிமன்றத்தில் கூறியிருப்பது பெரும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாலத்தை புதுப்பிப்பதாக கூறி ஒப்பந்தத்தை பெற்றுவிட்டு, எந்தப் பணிகளையும் முறையாக செய்யாமல் கடைசியல் கடவுளின் மீது பழிப்போடும் இவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
135 பேர் உயிரிழந்ததற்கு காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் இதுபோன்று அலட்சியமாக அதுவும் நீதிமன்றத்திலேயே கூறும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் வந்துவிட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“FIRல் ஏன் ஒரேவா நிறுவனத்தின் பெயர் இல்லை?”.. மோர்பி பால விபத்து குறித்து ப.சிதம்பரம் நறுக் கேள்வி
நாட்டையை உலுக்கிய விபத்து
குஜராத்தின் மச்சு ஆற்றின் மீது அமைந்திருந்த மோர்பி கேபிள் பாலம் 7 மாதங்களாக புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 26-ம் தேதி திறக்கப்பட்டது. அரசின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த பாலம் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், பாலம் திறக்கப்பட்டு நான்கே நாட்கள் ஆன நிலையில், கடந்த 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த பாலத்தை பார்ப்பதற்காக மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.அப்போது யாரும் எதிர்பார்த்திராக வகையில் கேபிள் பாலம் அறுந்து மச்சு ஆற்றில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 135 பேர் உயிரிழந்தனர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேபிளை கூட மாற்றாத கொடுமை
ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பாலத்தை புதுப்பிப்பதற்காக ஒப்பந்தம் பெற்ற நிறுவனமான 'ஒரேவா' ஒரு கடிகார நிறுவனம் என்பது தெரியவந்தது. இதுவரை பாலங்கள் அல்லது சாலைகளை புதுப்பிக்கும் அனுபவம் இல்லாத நிறுவனம் என்பதும் கண்டறியப்பட்டது. மேலும், ரூ.2 கோடி செலவில் புனரமைப்பதாக ஒப்பந்தம் எடுத்துவிட்டு, பாலத்தின் கேபிளை கூட மாற்றாமல் அதன் மீது வெறும் பெயின்ட்டை மட்டும் அந்த நிறுவனம் அடித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக் உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
"கடவுளின் விருப்பம்.."
இந்நிலையில், இந்த விபத்து வழக்கானது மோர்பி நகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக்கை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, "பாலத்தை ஏன் முறையாக புனரமைக்கவில்லை" என நீதிபதி எம்.ஜே. கான் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த தீபக் பரேக், "மோர்பி பாலம் அறுந்து விழ வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அதன்படியே நடந்துவிட்டது" எனக் கூறினார்.
"கேபிளுக்கு ஆயில் கூட போடவில்லை"
அப்போது மோர்பி டிஎஸ்பி ஜாலா கூறுகையில், "ஒரேவா நிறுவனத்தை பாலத்தை புனரமைக்கவே இல்லை. வெறும் தரைத்தளத்தை மட்டுமே மாற்றியுள்ளனர். பாலத்தை தாங்கி நிற்கும் கேபிள் மாற்றப்படவில்லை. கேபிள் துருப்பிடித்த நிலையிலேயே இருந்துள்ளது. கேபிளில் எண்ணெய், கிரீஸை கூட ஒரேவா நிறுவனம் போடவில்லை. கேபிள் மாற்றப்பட்டிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது" என்றார்.