முல்லை பெரியாறு அணை விவகாரம்: லோக்சபாவில் கேரளா- தமிழக எம்.பிக்கள் கடும் வாதம்!!
டெல்லி: முல்லை பெரியாறு விவகாரத்தை லோக்சபாவில் கேரள எம்.பி.க்கள் எழுப்பியதை அடுத்து அதிமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுப்பட்டனர்.
லோக்சபாவில் இன்று பூஜ்ஜிய நேரத்தின் போது (ஜீரோ அவர்) முல்லை பெரியாறு விவகாரத்தை கேரள எம்.பி. என்.கே.பிரேமசந்திரன் எழுப்பினார். முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தின் தீர்மானத்தை குறிப்பிட்டு, தமிழகத்துக்கு தண்ணீர் அளிப்பதில் கேரள அரசுக்கு எந்த முறன்பாடும் இல்லை என்றும் ஆனால் தங்கள் அணையை சுற்றியுள்ள மக்களின் பாதுகாப்பு குறித்து மட்டுமே அரசு அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் பிரேமசந்திரனின் பேச்சுக்கு வேணுகோபால் உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்து சபையின் நடுவே வந்து கூச்சலில் ஈடுபட்டனர்.
என்.கே.பிரேமசந்திரன் பேச்சுக்கு கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.வேணுகோபால். முல்லாபாளி ராமச்சந்திரன் ஆகியோர் குரல் மூலம் ஆதரவு தெரிவித்தனர். இதனால் சபை நடவடிக்கை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதனை அடுத்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரப் பிரதேச எம்.பியை பேசும்படி அழைத்தார்.