வரதட்சணை கொடுமை வழக்கில் ராதே மாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மும்பை: வரதட்சணை கொடுமை வழக்கில் பெண் சாமியார் ராதே மாவின் முன் ஜாமீன் மனுவை மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த நிகி(32) என்ற பெண் பெண் சாமியார் ராதே மா மீது போலீசில் புகார் அளித்தார். அவர் தனது மனுவில் கூறியிருந்ததாவது, சாமியார் ராதே மாவின் பேச்சைக் கேட்டு என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் ராதே மா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி ராதே மா மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராதே மாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிடுவார் என்றும் அவர் ஏற்கனவே போலீசாருக்கு விசாரணையில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் நிகி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
ராதே மாவின் வழக்கிறஞர் அசோக் குப்தே கூறுகையில்,
இந்த வழக்கிற்கும் ராதே மாவுக்கும் தொடர்பு இல்லை. நிகி வேண்டும் என்றே அவர் மீது புகார் தெரிவித்துள்ளார் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராதே மாவின் மனுவை தள்ளுபடி செய்தார். ராதே மா பாங்காக் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.