'எபோலா' காய்ச்சல் அறிகுறிகளுடன் மும்பைக்காரர் மருத்துவமனையில் அனுமதி
மும்பை: வேலை விஷயமாக நைஜீரியாவுக்கு சென்று வந்துள்ள மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு எபோலா வைரஸ் தாக்குதல் உள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் மும்பையின் புறநகர் பகுதியான வசாயைச் சேர்ந்த ஒருவர் வேலை விஷயமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு சென்று வந்துள்ளார். ஊர் திரும்பிய அவருக்கு எபோலா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளான உடம்பு வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதைுயடுத்து அவர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் ரத்த மாதிரி உள்ளிட்டவை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சோதனை முடிவுகள் வந்தால் தான் அவருக்கு எபோலா வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பது தெரியவரும்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. அங்கு 45 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். முன்னதாக டெல்லியைச் சேர்ந்த ஒருவர் கானாவில் இருந்து வந்த விமானத்தில் இருந்த சக பயணி ஒருவருக்கு எபோலா காய்ச்சல் ஏற்பட்டதால் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தார் 2 பேர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.