நல்ல மனிதர் போய்விட்டாரே: அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய டாக்டருக்காக நோயாளிகள் கண்ணீர்
ஒடிஸா: அமெரிக்காவில் நண்பரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் சுரேஷ் கடசாலி உலகிலேயே முதல்முறையாக ஹைப்ரிட் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த டாக்டர் சுரேஷ் கடசாலி(53) கடந்த 1994ம் ஆண்டு அமெரிக்காவில் குடும்பத்தோடு குடியேறினார். டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒடிஸா நகரில் ஹெல்தி ஹார்ட் சென்டர் என்ற பெயரில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வந்தார். பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவரான அவர் உலகிலேயே முதல்முறையாக ஹைப்ரிட் இதய ரத்தநாள அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோயாளிகளிடம் நல்ல பெயர் எடுத்திருந்த சுரேஷ் கடந்த வியாழக்கிழமை மருத்துவமனையில் வைத்து அவரது நண்பரும், வியாபாரத்தில் கூட்டாளியுமான அய்யாசாமி தங்கம்(60) என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சுரேஷை கொன்றுவிட்டு அய்யாசாமி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் சுரேஷ் பற்றி அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளி கேத்தி கானலி கூறுகையில்,
டாக்டர் கொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் இறந்துவிட்டார் என்றே நம்ப முடியவில்லை. இது உண்மையாக இருக்க முடியாது. நல்ல மனிதரான அவரை காயப்படுத்த மனசு வருமா. அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றவர். திங்கட்கிழமை தான் அவரை சந்தித்தேன். அது தான் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை. அன்று அவர் ஜோக்கடித்து என்னை சிரிக்க வைத்தார். ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை என்றார்.