நான் என்ன குறைச்சலான பதவியா வகிக்கிறேன்?.. டெல்லியில் வாயை விட்ட தம்பிதுரை
நான் துணை சபாநாயகர், என்னுடையது குறைந்த மதிப்புடைய பதவி அல்ல, முதல்வருக்கு இணையான பதவி என்று செய்தியாளர்களின் கேள்விக்கு தம்பிதுரை காட்டமாக பதில் அளித்தார்.
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு முதல்வர் ஏன் வரவில்லை என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நான் லோக்சபா துணை சபாநாயகர், முதல்வர் பதவிக்கு இணையானது என்று தம்பிதுரை பதிலளித்தார்.
பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி நதி நீர் மேலாண்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாள்களாக டெல்லியில் போராடி வருகின்றனர்.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் மேல் தமிழகமே அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில் விவசாயிகளை சந்திக்க லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இரண்டாவது முறையாக சந்தித்து பேசினார்.
சரமாரி கேள்விகள்
அவரிடம் நிருபர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். அப்போது ஒரு நிருபர் கடந்த 22 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வராதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
தம்பிதுரை பதில்
நான் துணை சபாநாயகர், எனது பதவி என்ன குறைச்சலான பதவியா? முதல்வருக்கு இணையான பதவி என்னுடையது என்று காட்டமாக கூறிய தம்பிதுரை சற்று சுதாரித்துக் கொண்டு, விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுக்குமாறு என்னை அனுப்பி வைத்ததே முதல்வர்தான் என்று தெரிவித்தார்.
பன்னீருக்கு எதிரான குரல்
ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது அவரை முதல்வராகவே மதிக்காமல் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் ஓபிஎஸ்ஸுக்கு போட்டியாக தம்பிதுரை தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்தனர். ஆட்சியும், கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும். அது சசிகலாவிடம்தான் இருக்க வேண்டும் என்று அவ்வப்போது சொல்லிய தம்பிதுரை, முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியவர்.
எடப்பாடிக்கு எதிராக
இந்த நிலையில் டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி குறித்து தம்பிதுரை கருத்து கூறியதை வைத்து பார்த்தால், எடப்பாடியை மட்டம் தட்டுவதாக உள்ளது. ஒருவேளை தினகரன் ஜெயித்து விட்டால் (ஒருவேளைதான்..) இதே தம்பித்துரையின் வாயால் எடப்பாடிக்கும் வேட்டு வைக்க தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.