நாகாலாந்து விவகாரம்: புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா கொண்டாட்டங்கள் அடியோடு ரத்து!
கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் 14 அப்பாவி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தலைநகர் கோஹிமா அருகே நடைபெற்று வந்த புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா கொண்டாட்டங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகாலாந்து மாநிலம் பழங்குடிகளின் தேசம். நாகா இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசக் கூடியவர்கள்.
மனித தலைகளை வெட்டி எடுத்து வீரத்தை வெளிப்படுத்துகிற கோன்யாக் பழங்குடிகளும் நாகா இனத்தவரே. கோன்யாக் பழங்குடிகளின் வீடுகளில் மனித மண்டை ஓடுகள் நிறைந்து காணப்படும். இது அந்த வீட்டுத் தலைவரின் வீரத்தை பறைசாற்றக் கூடியதாக கொண்டாடப்பட்டது.
காதல் திருமணம்.. அக்காவை படுகொலை செய்த தம்பி.. தலையை துண்டித்து தாயும், மகனும் செல்பி எடுத்த கொடூரம்
ஹார்ன்பில் திருவிழா
நாகாலாந்து மாநில பழங்குடிகளின் கலாசார திருவிழாக்களில் ஒன்றான ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் வாரத்தில் இந்த திருவிழா நடைபெறும். கடந்த 2000-ம் ஆண்டு முதல் ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஹார்ன்பில் திருவிழாவானது அண்மையில் நாகா பழங்குடி இனமக்களின் போற்றுதலுக்குரிய பண்டிகையாக மாறிவிட்டது.
திருவிழா முக்கிய அம்சங்கள்
நாகா இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பழங்குடி இனப் பிரிவினரும் தங்களது ஆடல், பாடல், விளையாட்டு என கலாசாரத்தை வெளிப்படுத்தும் மிக மிக வண்ணமயமான திருவிழா இது. இப்படித்தான் இந்த ஆண்டும் ஹார்ன்பில் திருவிழா டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி உற்சாகமோடு நடைபெற்று வந்தது.
பழங்குடிகள் படுகொலை
ஆனால் கோன்யாக் பழங்குடிகளின் தாய்நிலமான மோன் மாவட்டத்தில் ராணுவத்தினரால் 14 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஹார்ன்பில் திருவிழா கேள்விக்குறியானது. முதலில் ஹார்ன்பில் திருவிழாவில் இருந்து விலகிக் கொள்வதாக சில பழங்குடி அமைப்புகள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்தமாகவே நடப்பாண்டி ஹார்ன்பில் திருவிழா ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த ஆண்டு ஹார்ன்பில் திருவிழா சோகத்துடன் பாதியிலேயே முடிவடைந்து போய்விட்டது.
புறக்கணித்தது ஏன்?
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பழங்குடி அமைப்பு தலைவர்கள், எங்கள் பிள்ளைகளை இந்திய ராணுவம் சுட்டுப் படுகொலை செய்து ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாங்கள் ஆடிப் பாடி மகிழ்ந்து கொண்டிருக்கத்தான் முடியுமா? ஆகையால்தான் இந்த திருவிழாவைப் புறக்கணிக்கிறோம் என குமுறலை வெளிப்பாடுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.