நந்திகிராம் வழக்கு.. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பத்திரமாக வையுங்கள்.. ஐகோர்ட் அதிமுக்கிய உத்தரவு
கொல்கத்தா: பாஜகவின் சுவேந்து அதிகாரியின் வெற்றிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. பிரதமர் மோடி தொடங்கி அனைத்து அமைச்சர்களும் வங்கத்தில் முகாமிட்டிருந்தனர்.

மேற்கு வங்க தேர்தல்
இருப்பினும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜகவால் முடியவில்லை. அங்கு பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றது. திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக 213 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிய அமைத்தது. இருப்பினும், திரிணாமுல் தொண்டர்கள் மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது

மம்தா தோல்வி
இந்தத் தேர்தலில் திரிணாமுல் தலைவர் மம்தா நந்திகிராம் தொகுதியில் களமிறங்கினார். அவருக்கு எதிராக ஒரு காலத்தில் மம்தாவின் வலது கரமாக இருந்த சுவேந்து அதிகாரி பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். பிரசாரம் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை நந்திகிராம் தொகுதியில் அனல் பறந்தது. நள்ளிரவு வரை சென்ற வாக்கு எண்ணிக்கையில் சுவேந்து அதிகாரி சுமார் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கு
இருப்பினும், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக்கக் குற்றஞ்சாட்டிய மம்தா, சுவேந்து அதிகாரியின் வெற்றிக்கு எதிராகக் கொல்கத்தா உயர் நீதிமன்ற்தித்ல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை முதலில் நீதிபதி கவுசிக் சந்தா விசாரிப்பதாக இருந்தது. இருப்பினும், அவர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாகக் கடந்த வாரம் அறிவித்தார்.

நீதிபதி உத்தரவு
இதையடுத்து இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதி ஷம்பா சர்கார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications