சபர்மதி ஆசிரமத்தில் சீன அதிபருக்கு கீதையை பரிசளித்த மோடி
அகமதாபாத்: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜின் பிங்கிற்கு இந்தியப் பிரதமர் மோடி பகவத் கீதையின் சீன மொழிப்பெயர்ப்பை நினைவுப் பரிசாக வழங்கினார்.
சீன அதிபர் ஜின் பிங் தனது மனைவியுடன் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்திறங்கிய சீன அதிபர், பின்னர் பிரதமர் மோடியைச் சந்தித்தார்.
பொதுவாக உலகத் தலைவர்களைச் சந்திக்கிற போது அன்புப் பரிசு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் மோடி. அந்தவகையில் சீன அதிபருக்கு பகவத் கீதையின் சீன மொழிப் பெயர்ப்பையும், வெள்ளை நிற கதர் மேல் சட்டையும் பரிசாக அளித்தார்.
மோடியின் அன்பளிப்பை ஏற்றுக் கொண்ட சீன அதிபர், தான் அணிந்திருந்த வெள்ளை சட்டையின் மேல் அந்த வெள்ளை நிற மேல்சட்டையை அணிந்து கொண்டார். பின்னர் சபர்மதி ஆசிரமம் சென்ற அவர்கள். புனே எரவாடா சிறையில் அடைக்கப் பட்டிருந்த போது காந்தி பயன்படுத்திய ராட்டையை பார்வையிட்டார்.
காந்தி பயன்படுத்தியது போன்ற சிறிய அளவு ராட்டை ஒன்றை சபர்மதி ஆசிரம அறக்கட்டளை சீன அதிபருக்கு வழங்கியது. அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் மோடியும், ஜின்பிங்கும் ஊஞ்சலில் அமர்ந்தபடி கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.
பின்னர், சபர்மதி ஆசிரமத்தில் போடப்பட்டிருந்த பாரம்பரிய கட்டிலில் ஜின்பிங், தனது மனைவி பெங் லியுயானுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.