சென்னை மாதிரி இல்லை.. தேசிய ஊடகங்கள் கவனத்தை உடனே பெற்ற பெங்களூர் வெள்ளம்! ஏன் தெரியுமா?
பெங்களூர்: பெங்களூரில் பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்களை தனி தீவுகளாக்கிய காட்சி கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூறுவதாக அமைந்திருந்தது.
ஆனால், சென்னை வெள்ளத்தை தேசிய ஊடகங்கள் முதலில் கண்டுகொள்ளாமல் விட்டதை போல பெங்களூர் கைவிடப்படவில்லை. அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டு செய்தியை வெளியிட்டன.
சென்னையில், 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்ததால் நகரமே தீீவாக மாறியது. தொலைதொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயல் இழந்து போயின.
புறக்கணித்த ஊடகங்கள்
மக்களுக்கு சாப்பிட உணவு இல்லை, இடுப்பளவு தண்ணீர் ஓடினாலும், குடிக்க தண்ணீர் இல்லை. கர்ப்பிணிகள், முதியவர்கள் என வெள்ளத்தில் சிக்கி மக்கள் படாதபாடு பட்டனர். ஆனால் ஏதோ ஒரு செகண்ட் செய்தியாக அதை ஒளிபரப்பியதோடு நிறுத்திக்கொண்டன தேசிய அளவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்கள். இதில் சிஎன்என்-ஐபிஎன் மட்டும் விதிவிலக்கு.
நிலைமை மாறியது
பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்னையை சுற்றி பார்க்க வந்த பிறகுதான், தேசிய ஊடகங்கள் சென்னை வெள்ளத்திற்கு உரிய முக்கியத்துவத்தை அளித்து தேசத்தின் கவனத்தை ஈர்க்க தொடங்கின. உதவிகள் குவியத் தொடங்கின.
பெங்களூருக்கு முக்கியத்துவம்
ஆனால், பெங்களூரில் நிலைமை வேறு. தெற்கு பெங்களூரின் பொம்மனஹள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட மடிவாளா ஏரி, ஹுலிமாவு ஏரி ஆகியவற்றில் ஏற்பட்ட உடைப்பால் அருகாமையில் இருந்த குடியிருப்புகளில் நீர் புகுந்தது. நகரின் பிற பகுதிகளில் வெள்ளத்தால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் தேசிய ஊடகங்கள் கடந்த இரு தினங்களாக பெங்களூர் வெள்ளத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன.
லேசான மழைக்கே நேரடி ஒளிபரப்பு
சம்பவ இடத்தில் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை தேசிய ஊடகங்கள் நிறுத்தி, நொடிக்கு நொடி அப்டேட் செய்து கொண்டுள்ளன. இத்தனைக்கும் பெங்களூரில் பெய்தது 4.18 செ.மீ மழை மட்டுமே. சென்னையில் பெய்த 49 செ.மீ மழையுடன் ஒப்பிடக்கூட முடியாத அளவு இது.
ஐடி துறை
இதுபற்றி பெங்களூரில் பணியாற்றும் தேசிய ஊடக மூத்த செய்தியாளர் ஒருவரிடம் கேட்டபோது, "பெங்களூர் என்ற பெயருக்கே, தேசிய அளவில் ஒரு கவர்ச்சி உள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும் குறிப்பிட்டு பேசும் நகரமாக பெங்களூர் உள்ளது. ஐடி துறை ஜாம்பவான்களின் தலைமையகங்கள் இங்குதான் உள்ளன என்பது தேசிய ஊடகங்கள் முக்கியத்துவம் தர ஒரு காரணம்" என்றார்.
தேசிய நீரோட்டம்
"பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் கணிசமாக பெங்களூரில் வசிப்பதால், பெங்களூர் குறித்து செய்தி வெளியிடும்போது எங்கள் சேனல்களை பல மாநிலங்களிலும் பார்க்கிறார்கள். டி.ஆர்.பி எகிறுகிறது. ஆனால் சென்னை நகரம் ஒரு வட்டத்திற்குள்ளேயே இருப்பதால் பிற மாநில மக்கள் அதுகுறித்த செய்திகளை விரும்பி பார்ப்பதில்லை. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என்ற இரு கட்சி, தேசிய அரசியல் கோலோச்சுவதும், தேசிய நீரோட்டத்தில் இந்த மாநிலம் இணைந்திருக்க ஒரு காரணம்" என்றார் மற்றொரு சீனியர் செய்தியாளர்.
நடுநிலை அவசியம்
டிஆர்பி மற்றும் அதை சார்ந்த விளம்பர வருவாயை கருத்தில்கொள்வதால்தான் சில நகரங்கள் அதிக முக்கியத்துவமும், சில நகரங்கள் லேசான முக்கியத்துவமும் பெறுகின்றன. இதை மாற்றி, நிகழ்வுகளின் தன்மைக்கேற்ப ஆங்கில காட்சி ஊடகங்கள் முக்கியத்துவத்தை தர வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் பார்வை.