பரபரப்பான சூழலில் டெல்லியில் இன்று துவங்கும் கடற்படை கமாண்டர்கள் மாநாடு
பெங்களூர்: இந்திய கடற்படை குறித்து கடற்படை தளபதி ஆர்.கே. தோவன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்துடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இது குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கேப்டன் டி.கே. சர்மா ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
கடற்படை கமாண்டர்கள் மாநாடு இன்று முதல் நான்கு நாட்களுக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இந்திய கடற்படை பல சவாலான காரியங்களை வெற்றிகரமாக செய்து முடித்துள்ள நேரத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
கடற்படையின் செயல்பாடுகள், எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் கலந்தாலோசிக்கப்படும். 2014ம் ஆண்டு டிசம்பரில் மாலத்தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் நீர், கடந்த மார்ச், ஏப்ரலில் ஏமனில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் ராஹத், ஏப்ரல் மாதம் இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர்களை பிடித்தது ஆகியவை கடற்படை செய்த சாதனைகள் ஆகும்.
கமாண்டர்கள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்திய கடற்படையின் சைபர் பாதுகாப்பை பலப்படுத்துவது பற்றியும் பேச உள்ளனர். மாலுமிகளின் வாழ்க்கைத் தரம் குறித்தும் கமாண்டர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் கடற்படையில் பல விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்) திட்டத்தை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.