ஜும்மா மசூதியில் ஷெரீப் தொழுகை.. புகாரியையும் சந்தித்தார்
டெல்லி: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று காலை ஜும்மா மசூதிக்குச் சென்று தொழுகை செய்தார். மேலும் ஜும்மா மசூதியின் இமாம் சையத் அமது புகாரியையும் அவர் சந்தித்துப் பேசினார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புகாரி ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
முகலாய அரசர் ஷாஜகான் காலத்தில் கட்டப்பட்டது ஜும்மா மசூதி. அத்தகைய பாரம்பரியம் வாய்ந்த மசூதியில் நவாஸ் ஷெரீப் சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திங்கள்கிழமையன்று ஷெரீப் டெல்லி வந்தார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். இன்று முற்பகல் மோடியும், ஷெரீப்பும் சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த சந்திப்பு 25 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது இரு தரப்புஉறவுகளை வலுப்படுத்துவது, வாஜ்பாய் காலத்தில் விட்டுச் செல்லப்பட்ட நட்பு பாலத்தை மீண்டும் சரி செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்துப் பேசப்படும் என்று தெரிகிறது. மேலும் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட சதிகாரர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஷெரீப்பிடம் மோடி வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications