மீண்டும் விற்பனைக்கு வருமாம் மேகி நூடுல்ஸ்..பதவியேற்ற புதிய தலைவரின் "நம்பிக்கை"..
டெல்லி : இந்தியாவில் விரைவில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே நிறுவனத்தின் இந்தியத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் நாராயணன் கூறியுள்ளார்.
மேகி நூடுல்ஸ் உணவு பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன.
அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் உள்பட பல்வேறு மாநில அரசுகள் மேகி நூடுல்சுக்கு தடை விதித்தன.
இந்த நிலையில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் ‘பாதுகாப்பற்றவை' மற்றும் ‘மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை' என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, சந்தையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பல லட்சம் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இதனிடையே நெஸ்லே இந்திய நிர்வாகப் பிரிவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நெஸ்லேவின் இந்தியத் தலைவராக இருந்த எடின்னி பெனட் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, புதிய தலைவராக 55 வயதாகும் சுரேஷ் நாராயண் பதவியேற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், 103 ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையில் இருந்து வரும் நெஸ்லே நிறுவனம் தற்போது பெரும் சிக்கலில் இருப்பதாக தெரிவித்தார்.
மேகி நூடுல்ஸ் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது பற்றி எதுவும் கூற இயலாது என்றும், ஆனால், கூடிய விரைவில் மேகி நூடுல்ஸ்கள் சில்லறை விற்பனைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மேகி நூடுல்சில் சேர்க்கப்படும் பொருட்கள் மாற்றப்படும் என்றும் சுரேஷ் நாராயண் கூறினார்.