ஆர்.எஸ்.எஸ்.காரர் ராம் நாத்தை ஆதரிப்பதா.. அதற்கான பலனை அனுபவிப்பார் நிதீஷ்குமார்.. லாலு அட்டாக்
ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்.காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு நிதீஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு லாலு பிரசாத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அதற்கான பலனை அனுபவிப்பார் என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது.
பாஜக தனது வேட்பாளராக பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரிப்பதாக பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்தார்.
லாலு எதிர்ப்பு
இது நிதீஷ் குமாருடன் கூட்டணியில் இருக்கும் லாலு பிரசாத் யாதவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதீஷ் குமாரின் முடிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மீரா குமாருக்கு ஆதரவு
காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவித்துள்ள மீரா குமாரை நிதீஷ் குமார் ஆதரிக்க வேண்டும் என்று லாலு நிதீஷிடம் கேட்டுக் கொண்டார். மேலும், இது குறித்து லாலு, நிதீஷ் குமாரிடம் நேரில் பேச உள்ளதாகவும் கூறினார்.
பலனை அனுபவிப்பார்
அதே வேளையில், அவசரப்பட்டு நிதீஷ் குமார் பாஜக வேட்பாளர் ராம் நாத்தை ஆதரித்துவிட்டார். இது தவறான முடிவு. அதற்கான பலனை அவர் அனுபவிப்பார் என்று லாலு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
வரலாற்று பிழை
மேலும், ராம்நாத்தை ஆதரித்து ஒரு வரலாற்றுப் பிழை செய்துவிட்டார் நிதீஷ் குமார் என்று லாலு வேதனை தெரிவித்தார். மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள் என்றும் லாலு கூறியுள்ளார்.