கத்தார் சரக்கு கப்பல் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
மும்பை: மும்பை கடற்பகுதியில் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயுடன் கப்பல் மூழ்கிய விபத்தால், கடல் வளம் பாதிக்கப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கத்தார் நாட்டு கப்பல் நிறுவனத்திற்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேசியாவிலிருந்து எம்.வி.ரக் என்ற சரக்கு கப்பல் சுமார் 300 டன் கச்சா எண்ணை, 50 டன் டீசல், 60 ஆயிரம் டன் நிலக்கரியுடன் குஜராத் துறைமுகத்திற்கு கடந்த 2011ம் ஆண்டு வந்தது. கப்பலில் கொண்டு வரப்பட்ட நிலக்கரி அதானி அனல் மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், மும்பையில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் வந்துகொண்டிருந்த கப்பல் திடீரென கடலில் மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த நிலக்கரி, மற்றும் கச்சா எண்ணெய்கள் மூழ்கியதால் அப்பகுதியின் கடல்வளம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையில் கடலில் மூழ்கிய அந்தக் கப்பல் கத்தார் நாட்டைச் சேர்ந்த டெல்டா ஷிப்பிங் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கத்தார் நாட்டு கப்பல் நிறுவனத்திற்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேபோல் அதானி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.