நிர்மலா சீதாராமன் அல்லது உமா பாரதியை தமிழக ஆளுநராக்க திட்டமா?
தமிழக முழு நேர ஆளுநராக நிர்மலா சீதாராமன் அல்லது உமாபாரதி நியமிக்கப்படலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: தமிழகத்தின் முழுநேர ஆளுநராக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிர்மலா சீதாராமன் அல்லது உமாபாரதியை நியமிக்கப்படலாம் என்று ஒரு தகவல் டெல்லியில் ஓடிக் கொண்டுள்ளது. இருப்பினும் இது வெறும் யூகமே என்றும் சொல்கிறார்கள்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக மகராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓராண்டாக இருந்து வருகிறார். தமிழகத்துக்கு நிரந்த ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே சனிக்கிழமையன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.
உமாபாரதி
உடல்நலத்தை காரணம் காட்டி உமாபாரதி ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் நிர்மலா சீதாராமனும் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. அதேசமயம் நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
முழு நேர ஆளுநர்?
ஆனால் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் அல்லது உமாபாரதி இருவரில் ஒருவரை தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்க டெல்லி முடிவு செய்துள்ளதாக ஒரு புது தகவல் தற்போது உலா வருகிறது. காவிரிப் பிரச்சினையில் முற்றிலும் தமிழகத்திற்கு நேர் மாறான நிலைப்பாட்டை எடுத்தவர் நிர்மலா. தமிழகத்திற்குத் தண்ணீர் தரக் கூடாது என்று கூறி டெல்லியில் லாபி செய்த கர்நாடக குழுவுடன் இவரும் இடம் பெற்றிருந்தார்.
தமிழக பிரச்சனைகளில்...
அதேசமயம், தமிழக மீனவர் பிரச்சனை, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் பிரதிநிதியாக இவரை இறக்கி விட்டது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது. கீழடி விவகாரத்திலும் கூட ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நிர்மலா சீதாராமனின் பெயர் ஆளுநர் பதவிக்கு அடிபட்டாலும் கூட அது உறுதிப்படுத்தப்படவில்லை.