இந்தியாவில் சாலை விபத்துக்களில் ஒரு நாளைக்கு 400 பேர் பலி - நிதின் கட்கரி கவலை
டெல்லி: இந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக சாலை விபத்துக்களால் சராசரியாக 400 பேர் பலியாகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கவலை தெரிவித்துள்ளார்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து குறித்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதை வெளியிட்டு பேசிய நிதின் கட்கரி, இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 57 விபத்துக்கள் நடைபெறுகிறது. இதில் 17 பேர் உயிரிழக்கின்றனர்.
குறிப்பாக இதில் 54 சதவிதம் பேர் 15 வயது முதல் 34 வயது உடையவர்கள். இது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். சாலை விபத்துக்களில் 77 சதவீதம், ஓட்டுரின் கவனக் குறைவே காரணமாகவே ஏற்படுவதாக புள்ளி விவரம் தெரிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
சாலை விபத்துக்களை குறைக்க கடந்த 2 ஆண்டுகளாக தீவிர முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் எந்த மாற்றமும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இதை மாற்றுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் விபத்துக்களை தடுக்க மேலும் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் அவர் தெரிவித்தார்.