இறுதி கட்டத்தில் குஜராத் முதல்வர் தேர்வு.. அனைத்து தகுதியோடும் ஒருவரை இறுதி செய்த அமித்ஷா
காந்திநகர்: குஜராத் முதல்வர் ஆனந்தி பென் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் இறுதிகட்ட வேலைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா.
குஜராத் முதல்வராக பதவி வகித்து வந்து நரேந்திர மோடி, இந்திய பிரதமரானதும், அவருக்கு பதிலாக குஜராத் முதலவராக்கப்பட்டவர் ஆனந்தி பென்.
பட்டேல்கள் போராட்டம், தலித்துகள் போராட்டம் போன்றவற்றை உரிய வகையில் கட்டுப்படுத்த தவறியதாக ஆனந்தி பென் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ஆளுநர் ஓ.பி.கோஹ்லியிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஆனந்தி பென் வழங்கிய நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்யும்வரை காபந்து முதல்வராக பதவியில் தொடரும்படி ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, புதிய முதல்வர் ரேசில், மாநில பாஜக தலைவர் விஜய் ருபனி, மற்றும் நிதின் பட்டேல் ஆகியோர் உள்ளனர். ஆனால், விஜய் ருபனியோ, தான் கட்சி பணிகளில் ஈடுபடவே விரும்புவதாக கூறிவிட்டார். எனவே நிதின் பட்டேல் மட்டுமே ஒரே ஆப்ஷனாக எஞ்சியுள்ளது.
பட்டேல் இனத்தவர்கள் போராட்டத்தை கூல் செய்ய நிதின் பட்டேலை முதல்வராக்குவதுதான் பாஜகவின் வாக்கு வங்கியை காக்க உதவும் என்பது கட்சி மேலிட திட்டம். நாளை நடைபெறும் குஜராத் மாநில சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய முதல்வர் தேர்வு நடைபெற உள்ளது.
நிதின் பட்டேல் குஜராத் மாநில அமைச்சரவையின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பட்டேல்களின் கோட்டையான ராஜ்கோட்டை சேர்ந்தவர்.