முதல்வர் பதவியை ராஜினமா செய்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்: "கேஜ்ரிவால்" பாணியில் நிதிஷ்
பாட்னா: பீகார் முதல்வர் பதவியில் இருந்து பதவி விலகியதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்தது. லோக்சபா தேர்தலில் அக்கட்சி பீகாரில் 2 தொகுதிகளைக் கைப்பற்றி தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்.
பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தின் மஞ்சியை முதல்வராக்கினார் நிதிஷ். ஆனால் மஞ்சியோ நிதிஷுக்கு எதிராக கலகக் கொடி தூக்கினார். அவரை நீக்கிவிட்டு மீண்டும் முதல்வராகவும் நிதிஷ்குமார் மேற்கொண்ட முயற்சியும் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சற்று முன்னர் முதல்வர் பதவியை மஞ்சி திடீரென ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் நிதிஷ்குமார் கூறியதாவது:
நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறுதான். இனி உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற முடிவுகளை எடுக்கமாட்டேன். இனி எப்போதும் மக்கள் நலனைத்தான் கவனத்தில் கொள்வேன். நாம் பீகாரின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட வேண்டும்.
நான் முதல்வர் பதவியை தவறுதலாக ராஜினாமா செய்துவிட்டேன். பீகாரில் ஆட்சி அமைக்க ஏற்கெனவே உரிமை கோரி இருக்கிறேன். தற்போதும் ஆளுநரின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்.
மஞ்சியை முன்வைத்து பாரதிய ஜனதா நாடகம் நடத்திப் பார்த்தது. நான் ஒருபோதும் மஞ்சி அரசில் தலையிட்டதே கிடையாது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தம் மீது நடவடிக்கை வராத வகையில் அனைத்து முயற்சிகளையும் மஞ்சி மேற்கொண்டுப் பார்த்தார்.. ஆனால் அது நீடிக்கவில்லை.
இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.
கேஜ்ரிவால் பாணி..
டெல்லியில் 49 நாள் ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், சட்டசபை தேர்தலின் போது அவசரப்பட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.. மன்னித்துவிடுங்கள் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். தற்போது அதே பாணியை நிதிஷ்குமாரும் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.