பாஜகவை கழட்டிவிட பல மாதங்களுக்கு முன்பே போடப்பட்ட மாஸ்டர் பிளான்! நிதிஷ் குமார் பக்கா ஸ்கெட்ச்
பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறிக்கும் நிதிஷ் குமாரின் முடிவு நேற்று உருவாகி இன்று எடுக்கப்பட்டது அல்ல; இதற்காக பல மாதங்களுக்கு முன்பே நிதிஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் திட்டம் தீட்டி ஸ்கெட்ச் போட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
அரசியலில் எதுவும் நடக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக விளங்குகிறது பிகார். ஒரே நாளில் அரசை கவிழ்த்து மீண்டும் ஆட்சியமைக்கக் கூடிய சாணக்கியர் என மறுபடியும் நிரூபித்திருக்கிறார் நிதிஷ் குமார். கடந்த தேர்தலில் குறைந்த தொகுதிகளை கைப்பற்றிய போதிலும் பாஜக விட்டுக்கொடுத்ததால் மட்டுமே நிதிஷ் குமாரால் முதல்வர் நாற்காலியில் அமர முடிந்தது. இத்தகைய உதவியை செய்த பாஜகவை திடீரென நிதிஷ் தூக்கியெறிய என்ன காரணம்? தனது அரசியல் எதிரியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் உடனே அவரால் எப்படி கூட்டணி அமைக்க முடிந்தது? இதுபோன்ற ஏராளமான கேள்விகளை அரசியல் பார்வையாளர்கள் எழுப்பி வந்தனர். அதற்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது.
பீகாரில் நிதிஷ் குமாருடனான கூட்டணி இயற்கையானது.. ஒப்பந்தம் கிடையாது.. தேஜஸ்வி யாதவ் விளக்கம்!
என்னதான் பாஜகவுடன் நிதிஷ் குமார் கூட்டணி வைத்திருந்தாலும், கொள்கை ரீதியாக எந்தவொரு விஷயத்திலும் அவர் அக்கட்சியுடன் இதுவரை சமரசம் செய்தது கிடையாது எனக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் மறைமுக மோதல் இருந்து வந்துள்ளது. இருந்தபோதிலும், ஆட்சி அதிகாரத்துக்காக இரு கட்சிகளும் ஒன்றையொன்று அனுசரித்து சென்றன.
குறுக்கே வந்த ஜாதி அரசியல்
பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இடையேயான மோதல் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த சூழலில்தான், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கடந்த ஏப்ரல் மாதம் முன்வைத்தது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நீண்டகால கோரிக்கையை ஆர்ஜேடி எழுப்பியதால் அக்கட்சிக்கு அந்த சமூகத்தினர் இடையே ஆதரவு அதிகரிக்க தொடங்கியது. ஆர்ஜேடி பக்கம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் சாய தொடங்கியதை கவனித்த முதல்வர் நிதிஷ் குமார் சற்று கலக்கமடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு, தானும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். பிகாரில் உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துமாறு பாஜக தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்த தொடங்கினார்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜக ஆதரவளித்த போதிலும், சிறுபான்மை மக்கள் இதனால் பயனடைவார்கள் எனக் கருதி இந்த விஷயத்தில் சற்று அமைதி காத்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பாஜகவுக்கு விருப்பமில்லை என்பதை உணர்ந்து கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், சிறிதும் தாமதிக்காமல் கடந்த மே மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
மாஸ்டர் பிளான்
அந்த சமயத்தில்தான், லாலுவின் ஆர்ஜேடியுடன் நிதிஷ் குமார் லேசாக நெருக்கம் காட்ட தொடங்கினார். ஆர்ஜேடி தலைவரும், லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் நிதிஷ் குமார் பக்கபலமாக நின்றார். இது பாஜக - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்திய போதிலும், முதல்வர் நாற்காலியில் அமர வைத்த தங்களுக்கு நிதிஷ் குமார் துரோகம் செய்ய மாட்டார் என பாஜகவினர் தீர்க்கமாக நம்பினர்.
ஜாதி வாக்குகள்
ஆனால், பாஜகவுக்காக தனது முக்கிய வாக்கு வங்கியான இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக வாக்குகளை இழக்க நிதிஷ் தயாராக இல்லை. ஜாதி கணக்கெடுப்பு விஷயத்தில் பாஜகவும் இறங்கி வருவதாக தெரியவில்லை. இதனால் பாஜகவை கழட்டிவிடும் முடிவுக்கு வந்தார் நிதிஷ். இதற்காக கடந்த மே மாதம் முதலாகவே நிதிஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் திரைமறைவில் ஸ்கெட்ச் போட்டு வந்ததாக இரு கட்சிகளுக்கும் நெருக்கமான பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டணி முடிவு
பாஜக உடனான கூட்டணியை முறித்தால் ஆர்ஜேடி தனக்கு ஆதரவு அளிக்குமா என்பதை அறிய பல முறை தேஜஸ்வி யாதவுக்கு நிதிஷ் குமார் மறைமுக தூது விட்டிருக்கிறார். தேஜஸ்வியிடம் இருந்து க்ரீன் சிக்னல் வந்ததும், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளையும் நிதிஷ் அணுகியிருக்கிறார். இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் ஆகியோரிடமும் நிதிஷ் குமார் தொலைபேசியில் பேசி வந்ததாக தெரிகிறது.
நான்கு மாத திட்டம்
ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளின் ஆதரவு தனக்கு கிடைத்துவிட்டதை உறுதிசெய்து கொண்ட பிறகே, பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக் கொண்டதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கடந்த 4 மாதங்களாக ரகசிய திட்டம் தீட்டியே நிதிஷ் குமார் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியது இப்போது தெரியவந்திருக்கிறது.