உபி மருத்துவமனையில் 14 நோயாளிகள் உயிரிழப்புக்கு நைட்ரஜன் ஆக்ஸைடு காரணமா?
உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் 14 அறுவை சிகிச்சை நோயாளிகள் உயிரிழந்ததற்கு காரணம் விஷ வாயுவான நைட்ரஜன் ஆக்ஸைடு வழங்கப்பட்டதே என கூறப்படுகிறது.
வாரணாசி: உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் 14 அறுவை சிகிச்சை நோயாளிகள் உயிரிழந்ததற்கு காரணம் விஷ வாயுவான நைட்ரஜன் ஆக்ஸைடு வழங்கப்பட்டதே என கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனுடன் இணைந்து சர் சுந்தர்லால் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையில் 14 அறுவை சிகிச்சை நோயாளிகள் திடீரென உயிரிழந்துள்ளனர். வழக்கத்துக்கு மாறான இந்த சம்பவத்தில்,அலகாபாத் ஐகோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிட்டது.
நைட்ரஜன் ஆக்ஸைடு வழங்கப்பட்டதா?
இதுகுறித்து விசாரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் விசாரணையில் அந்த மருத்துவமனையில் மயக்க மருந்துக்கு பதில் விஷ வாயுவான நைட்ரஜன் ஆக்சைடு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது
உரிமம் பெறவில்லை
இதைத்தொடர்ந்து அலகாபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனமான பேரர்ஹட் இண்டஸ்ட்ரியல் என்டர்பிரைசஸ் சப்ளை செய்த வாயுதான், அறுவை சிகிச்சை நோயாளிகளின் சாவுக்கு காரணமா என விசாரணை நடத்தப்படுகிறது. மேலும் உரிமம் பெறாமல் இந்த நிறுவனம் மருத்துவத்துக்கான வாயு தயாரித்ததும் தெரியவந்துள்ளது.இந்த நிறுவனத்தின் இயக்குனர் அசோக் குமார் பாஜ்பாய், அலகாபாத் வடக்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஹர்சவர்தன் பாஜ்பாயின் தந்தை ஆவார்.
அதே வாயுதான் வழங்கப்படுகிறது
தாங்கள் சப்ளை செய்த வாயுவால் நோயாளிகள் உயிரிழந்தனர் என்பதை ஏற்க தனியார் நிறுவனம் மறுத்துள்ளது. சுந்தர் லால் மருத்துவமனைக்கு வழங்கப்படும் வாயுதான் அலகாபாத் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட வருவதாகவும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி
அண்மையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உத்தரப்பிரதேச மருத்துவமனையில் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்நிலையில் விஷவாயுவால் அறுவை சிகிச்சை நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.