"அல்வா கொடுத்து விட்டு" பட்ஜெட் பிரதி எடுக்கக் கிளம்பிய நிதியமைச்சக ஊழியர்கள்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட் உரை) பிரதி எடுக்கும் பணி நேற்று பாரம்பரிய முறைப்படி தொடங்கியது.
அந்தப் பாரம்பரிய முறை என்னவென்றால் அல்வா விருந்து ஆகும். அந்த விருந்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது கையால் அல்வாவைக் கிண்டி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மூடிய அறைக்குள் பட்ஜெட்டை பிரதியெடுக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாகியுள்ளனர். இந்தப் பணிகள் முடியும் வரை அவர்கள் மொபைல் போன்களை பயன்படுத்த முடியாது, தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு பிளாக் கட்டடத்தில்
பட்ஜெட் உரை பிரதி எடுக்கும் பணி தொடர்பான அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் வடக்கு பிளாக்கில் உள்ள கட்டடத்தில் மூடப்பட்ட அறைக்குள் தங்களது பணியில் ஈடுபட்டுள்ளனர். லீக் ஆகி விடாமல் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன.
பிப்ரவரி 28ம் தேதி பட்ஜெட்
பிப்ரவரி 28ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் வரை இவர்கள் யாரும் வெளியில் வர முடியாது.
பட்ஜெட் அச்சகம்
வடக்கு பிளாக்கில் உள்ள நிதியமைச்சகத்தின் கீழ் அலுவலகத்தில் இவர்கள் உள்ளனர். அங்குதான் பட்ஜெட் அச்சகம் உள்ளது. அங்குதான் தற்போது பட்ஜெட்டை அச்சிடும் பணி நடந்து வருகிறது.
10 நாளுக்கு மூச்
அடுத்த பத்து நாட்களுக்கு இவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. மனைவி, கணவருடன் கூட பேச முடியாது. மொபைல் போன்களைப் பயன்படுத்த முடியாது. யாரையும் பார்க்கவும் முடியாது.
அல்வா கிண்டல்
இந்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு அல்வா விருந்து என்ற பாரம்பரிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை அருண் ஜேட்லி தொடங்கி வைத்தார்.
சூடான சுவையான அல்வா
பட்ஜெட் பிரதி எடுக்கும் பணிக்கு முன்பாக அல்வா தயாரித்து அதை அனைவரும் சாப்பிடுவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதுதான் நேற்று நடந்தது. இதற்காக அல்வா கிண்டும் பணியும் வடக்கு பிளாக் வளாகத்தில் நடந்தது. அதில் கிண்டப்பட்ட அல்வாவை அருண் ஜேட்லி உள்ளிட்டோர் சுவைத்தனர்.
ஏன் அல்வா?
தித்திப்புடன் பட்ஜெட் பணிகளில் ஈடுபட்டு அந்த ஆண்டை தித்திப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இனிப்புடன் இந்த பணி தொடங்கப்படுகிறதாம்.